தான்சானியா விமான விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 19 ஆக அதிகரிப்பு.

கிழக்கு ஆப்பிரிக்க நாடான தான்சானியாவில் உள்ள டார் எஸ் சலாம் நகரில் இருந்து புகோபா நகரை நோக்கி சென்ற பயணிகள் விமானம் ஒன்று மோசமான வானிலை காரணமாக, அங்குள்ள விக்டோரியா ஏரியில் விழுந்து விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தில் 3 பேர் பலியானதாக முதற்கட்ட தகவல் வெளியாகி இருந்தநிலையில் விமான விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 19 ஆக அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இந்த சம்பவத்தில் இதுவரை 26 பேர் மீட்கப்பட்டுள்ளதாகவும், தொலைந்த நபர்களை தேடும் பணி நடைபெற்று வருவதாகவும் மீட்கப்பட்டவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீட்புப் பணியின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைத்தளத்தில் பரவி வருகிறது. முன்னதாக அந்த விமானத்தில் 39 பயணிகள், இரண்டு விமானிகள் மற்றும் இரண்டு கேபின் பணியாளர்கள் உட்பட மொத்தம் 43 பேர் இருந்தனர். விமானம் சுமார் 100 மீட்டர் (328 அடி) நடுவானில் இருந்தபோது, அது சிக்கலை எதிர்கொண்டது, மோசமான வானிலை காரணமாக ஏரியில் விழுந்து விபத்து ஏற்பட்டதாக போலீஸ் கமாண்டர் வில்லியம் மவாம்பகலே தெரிவித்திருந்தார்.