தியாக தீபம் திலீபனின் நினைவிடத்தில் பொது மக்களை தாக்கிய தமிழ்தேசிய மக்கள் முன்னணி.

தியாக தீபம் திலீபனின் நினைவிடத்தில் குழப்பங்களுடன் அஞ்சலி நிகழ்வு இடம்பெற்றது குழப்பத்தில் ஒருவர் காயமடைந்து  யாழ் போதனா வைத்தியசாலையால் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தியாக தீபம் திலீபனின் நினைவிடத்தில் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியான தமிழ்தேசிய மக்கள் முன்னணி  எல்லை மீறி முன்னாள் போராளிகள் , மாவீரர் குடும்பத்தினர் , காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் , அரசியல் கைதிகளின் உறவினர்கள் , யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் , சக கட்சியினர் என அனைத்து தரப்புகளுடனும் வலிந்து முரண்பாடுகளை ஏற்படுத்தி அநாகரிகமான முறையில் நடந்து கொண்டனர்.

அவர்கள் அவ்வாறு அநாகரிகமான முறையில் நடந்து கொண்டிருந்த போது, அவர்களை கட்டுப்படுத்தாது,  அருகில் இருந்த கொட்டகைக்குள் இருந்து அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வேடிக்கை பார்த்த வண்ணம் இருந்தமை அங்கிருந்த பொதுமக்கள் மத்தியில் விசனத்தை ஏற்படுத்தி இருந்தது.

தியாக தீபத்தின் நினைவேந்தல் நாளின் தொடக்க நாளுக்கு முந்தைய நாளான 14ஆம் திகதி இரவு அகில இலங்கை தமிழ் காங்கிரசினர்  நினைவிடத்தினை மறைத்தவாறு பந்தல் அமைத்த போது அங்கிருந்தவர்கள் அவ்வாறு செய்ய வேண்டாம் என்ற போது அவர்களுடன் முரண்பட்டார்கள்.

தொடக்க நாளான மறுநாள் , தியாக தீபத்தின் நினைவிடத்தில் வைக்கப்பட்டு இருந்த படத்தினை மறைத்தவாறு காங்கிரசினர்  கொடி கம்பங்களை நாட்டினார்கள். அவ்வாறு படங்களை மறைக்குமாறு கொடி கம்பங்களை நட வேண்டாம் என்ற போதும் முரண்பட்டுக்கொண்டார்கள்.

இறுதி நாள் நிகழ்வுக்கான ஏற்பாடுகளை நேற்று முன்தினம் செய்ய முற்பட்ட போது முரண்பட்டனர்

இதேவேளை , தியாக தீபத்தின் நினைவிடத்தை.  காலை முதல் காங்கிரசினர் தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தனர்.

நினைவிடத்தை சுற்றி மஞ்சள் உடுப்புக்களுடன் நின்று , அஞ்சலி செலுத்த வருபவர்களை மாத்திரம் அனுமதித்து மற்றைய கட்சிகள், அமைப்புக்களை சார்ந்தவர்களை அவ்விடத்தில் இருந்து அப்புறப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

தியாக தீபம் உயிரிழந்த 10.48 மணியளவில் பொதுச்சுடர் ஏற்றப்படுவதாக இருந்த போது , தாமே அவற்றை முன்னிருந்து ஏற்ற வேண்டும் எனும் போட்டியில், தள்ளு முள்ளுக்களுக்கு மத்தியில் 3 நிமிடங்கள் முந்தி 10.45 மணியளவில் தீபத்தினை ஏற்றினார்கள்.

கைதடி பகுதியில் இருந்து இரு இளைஞர்கள் தூக்கு காவடி எடுத்து தியாக தீபத்தின் நினைவிடத்தினை 10.40 மணியளவில் வந்தடைந்தனர்.

அவ்வாறு வந்தவர்கள் நினைவிடத்தின் முன்பாக காவடியை இறக்க முற்பட்ட போது காங்கிரசினர் அனுமதிக்காது முரண்பாடுகளை வளர்த்தனர்.

தாம் நினைவிடம் முன்பாக தீபம் ஏற்ற போகிறோம். என அவ்விடத்தினை சுற்றி கைகளை கோர்த்தவாறு நின்றனர்.  அதன் போது காவடியுடன் வந்தவர்கள் காவடியை இறக்கிய பின்னர் தீபம் ஏற்றுங்கள் , தீபம் ஏற்றுவதற்கு 08 நிமிடங்கள் இருக்கின்றன தானே என கேட்ட போது , அவ்வாறு அனுமதிக்க முடியாது என முரண்பட்டுக்கொண்டனர். அதனால் அப்பகுதியில் தர்க்கம் ஏற்பட்ட போது, அந்த அமளிக்குள் அவசரப்பட்டு , மூன்று நிமிடங்களுக்கு முன்னரே தீபம் ஏற்றினார்கள்.

அமளிக்குள் சுடர் ஏற்றிய பின்னரே  ஒலிபெருக்கியில் இரு நிமிட அக வணக்கம் செய்யுமாறு அறிவிக்கப்பட்டது. அதன் போதும் அவ்விடத்தில் அமைதியின்மை காணப்பட்டமையால் , வேலன் சுவாமிகள் அமைதி காக்குமாறு கூறிய போது ,காங்கிரசினர்  தகாத வார்த்தைகளால் அவரை பேசினார்கள். தொடர்ந்து மலர் அஞ்சலி செலுத்தும் நிகழ்வின் போது மலர் அஞ்சலி செலுத்த வருவோருக்கு இடையூறாக அவ்விடத்தில் தாமே மலர் அஞ்சலி செலுத்த  தடைகளை ஏற்படுத்தும் விதமாக நினைவிடத்தில் குழுமி நின்றனர். மலரஞ்சலி செலுத்தியவர்கள் கீழே இறங்கி மற்றவர்களுக்கு சந்தர்ப்பம் கொடுக்குமாறு கோரிய போது முரண்பட்டு கொண்டனர்.

காலை 10.40 மணியளவில் நினைவிடத்திற்கு வந்த காவடியை 11.15 மணி தாண்டியும் இறக்க விடாது தடுத்து வைத்திருந்த நிலையில்  தடைகளை மீறி முன்னாள் போராளிகள் காவடியை இறக்க முற்பட்ட போது தர்க்கம் ஏற்பட்டது. அவற்றையும் மீறி முன்னாள் போராளிகள் காவடியை நினைவிடத்தின் முன்பாக இறங்கினார்கள்.

காவடியை இறக்க தடை ஏற்படுத்தும் விதமாக பிரதான தீபத்தினை காங்கிரசினர் நினைவிடத்தின் முன்பாக வைத்திருந்தனர். காவடி இறக்க ஏதுவாக அதனை சற்று தள்ளி வைக்குமாறு கூறிய போது ஏற்பட்ட தள்ளு முள்ளில் , தீபத்தின் சுடு எண்ணெய் பட்டு ஒருவர் காயங்களுக்கு உள்ளானார். அவரை அங்கிருந்தவர்கள் அம்பியுலன்ஸ் வண்டியில் ஏற்றி யாழ்.போதனா வைத்திய சாலைக்கு அனுப்பி வைத்தனர்.

இவ்வாறாக  நினைவிடத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி அமைப்பை சேர்ந்த அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியினர் நடந்து கொண்ட அநாகரிக செயற்பாடு அப்பகுதியில் நின்ற மக்கள் மத்தியில் கடுமையான விசனத்தை ஏற்படுத்தி இருந்தது.