தூத்துக்குடியில் இருந்து கடத்தப்பட்ட ரூ.20 கோடி கஞ்சா இலங்கை கடற்படையிடம் சிக்கியது.

தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கடத்திச் சென்ற 450 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக 5பேர் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தூத்துக்குடியிலிருந்து கடல் வழியாக இலங்கைக்கு மஞ்சள், பீடி இலைகள் மற்றும் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் கடத்தப்படுவது வாடிக்கையாக நடந்து வருகிறது. இதனை தடுக்க காவல்துறை பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. இதில் பலர் இங்கேயே பிடிபட்டு விடுகின்றனர். பலர் கடத்திச் சென்று இலங்கையில் பிடிபடுவது சகஜமாகி வருகிறது.

கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் இதுபோன்று போதைப் பொருள் கடத்திச் சென்று அங்கு பிடிபட்டவர்கள் 14 பேர் இலங்கையில் உள்ள பல்வேறு சிறைகளில் உள்ளனர்.இந்நிலையில் நேற்று இலங்கை அருகே சென்ற ஒரு மீன்பிடி படகை இலங்கை கடற்படையினர் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர்.

அப்போது அந்தப் படகு தூத்துக்குடியைச் சேர்ந்தது என்றும்இ படகில் இலங்கைக்கு கஞ்சா கடத்திச் செல்லப்பட்டதும் தெரியவந்தது. பிடிபட்ட கஞ்சாவின் மதிப்பு ரூ.1 கோடியே 35 லட்சம் ஆகும். இதன் சர்வதேச மதிப்பு ரூ.20 கோடியாகும். இதையடுத்து படகுடன் கஞ்சாவை இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் படகில் இருந்த 5பேரை கைது செய்தனர்.இதனிடையே இலங்கையில் பிடிபட்ட படகு ராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சி மடத்தைச் சேர்ந்த ஒருவருடையது எனத் தெரியவந்துள்ளது. இது குறித்து கியூ பிரிவு போலீசார் மற்றும் மத்திய, மாநில உளவுத் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.