முன்னாள் சோவியத் யூனியன் தலைவர் மிக்கைல் கோர்பசேவ் இன்று 91 வயதில் காலமானார்.

சோவியன் யூனியனின் முன்னாள் தலைவராக இருந்தவர் மிக்கைல் கோர்பசேவ் (91). சோவியன் யூனியனின் முதுபெரும் அரசியல் தலைவரான மிக்கைல் கோர்பசேவ் சோவியத் யூனியனின் தலைவராக 1985 முதல் 1991-ம் ஆண்டு சோவியத் யூனியன் கலைக்கப்படும் வரை தலைவராக இருந்தார்.

அப்போது மிகப்பெரிய சீர்திருத்தங்களைக் கொண்டுவந்தார். இவரது சிறந்த நிர்வாகத்தில் பனிப்போர் முடிவுக்கு வந்தது. சோவியத் யூனியனில் இருந்து பிரிந்து பல்வேறு நாடுகள் குடியரசாயின. சோவியத் யூனியன் பொருளாதாரம் மறைமுகமான பணவீக்கம் மற்றும் விநியோகப் பற்றாக்குறை ஆகிய இரண்டாலும் பாதிக்கப்பட்டிருந்ததால், பெரெஸ்ட்ரோயிகா அல்லது மறுசீரமைப்பு என்ற பொருளாதார சீர்திருத்தத் திட்டத்தையும் கோர்பசேவ் தொடங்கினார்.

அவரது காலத்தில் பத்திரிகை மற்றும் கலை சமூகத்திற்கு கலாச்சார சுதந்திரம் வழங்கப்பட்டது. அரசாங்க எந்திரத்தின் மீதான கட்சி கட்டுப்பாட்டை குறைக்கும் வகையில் தீவிர சீர்திருத்தங்களை அவர் செய்தார். அவரது ஆட்சியின் போது ஆயிரக்கணக்கான அரசியல் கைதிகள் மற்றும் அவர்களது எதிர்ப்பாளர்கள் விடுவிக்கப்பட்டனர். 1990-ம் ஆண்டு இவருக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.

இந்நிலையில், வயது முதுமை, உடல்நலக் குறைவு காரணமாக மிக்கைல் கோர்பசேவ் இன்று 91 வயதில் மரணம் அடைந்துள்ளதாக ரஷிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.