அடுத்த வருடம் ஜனவரி மாதம் ஜனாதிபதித் தேர்தல்: ரணிலைப் பொது வேட்பாளராக நிறுத்துவதற்குப் பஸில் பச்சைக்கொடி.

அடுத்த வருடம் ஜனவரி மாதம் ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாட்டை அரசு செய்து வருகின்றது என அரச உயர்மட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.இதற்காகத்தான் உள்ளூராட்சி சபைத் தேர்தலை அரசு ஒத்திப்போடுவதற்குத் தயாராகின்றது என்றும் அந்தத் தகவல்கள் மேலும் கூறுகின்றன.

இது தொடர்பில் ஓரிரு மாதங்களுக்கு முன் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரான ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் ஐ.தே.கவின் தவிசாளருமான வஜிர அபேவர்த்தனவும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பஸில் ராஜபக்சவை அழைத்துப் பேசினர்.ரணில் விக்கிரமசிங்கவைப் பொது வேட்பாளராக நிறுத்துவதற்கு அவர்கள் இருவரும் மொட்டுக் கட்சியின் ஆதரவைப் பஸிலிடம் கோரி இருந்தனர். மொட்டு – ஐ.தே.க. வாக்குகளையும், வடக்கு – கிழக்கில் உள்ள தமிழ் – முஸ்லிம் வாக்குகளையும் – மலையக மக்களின் வாக்குகளையும் வைத்து வெற்றி பெறலாம் என்று வஜிர அப்போது பஸிலிடம் கூறி இருந்தார்.

அந்தவேளை ரணிலைப் பொது வேட்பாளராக நிறுத்துவதற்குப் பஸிலும் பச்சைக்கொடி காட்டியிருந்தார் என்று தற்போது தகவல் வெளியாகியுள்ளது.