நடுக்காட்டில் மீட்கப்பட்டதாக கூறப்பட்ட முன்னாள் போராளி தொடர்பில் வெளியான தகவல்.

மட்டக்களப்பு மாவட்டம் பட்டிப்பளைப் பிரதேசத்திற்குட்பட்ட தாந்தாமலைக் காட்டுப் பகுதியிலிருந்து முன்னாள் போராளி ஒருவர் கடந்த புதன்கிழமை (08.03.2023) மீட்கப்பட்டு வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் முன்னாள் போராளி தொடர்பான விடயங்கள் முற்றிலும் பொய் என அவரது குடும்பத்தினர் மட்டக்களப்பு ஊடக அமையத்தில் ஊடகவியலளர் சந்திப்பில் தெரிவித்துள்ளனர்.

காட்டிலிருந்து மீட்கப்பட்டதாக கூறப்படும் முன்னாள் போராளியின் சகோதரியும் அவரது மருமகனுமே இன்றைய தினம் மட்டக்களப்பு ஊடக அமையத்தில் வைத்து இவ்வாறு தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்கள்,

அவர் நடுக்காட்டில் தங்கியிருக்கவில்லை. எங்களுக்கு சொந்தமான இடத்திலேயே அவர் தங்கியிருந்தார். அதுமட்டுமன்றி, அவர் தங்குவதற்கான கொட்டகையையும் நாங்களே அமைத்துக்கொடுத்தோம்.

அதேவேளை, அவருக்கு சமையலுக்குத் தேவையான உணவுப்பொருட்களையும் நாங்களே ஒவ்வொரு வாரமும் கொடுத்து வருகின்றோம். அவரை எங்களது வீட்டில் தங்க வைப்பதற்காக பல தடவைகள் முயற்சி செய்தும் அவர் அதற்கு சம்மதிக்காது தனியாகவே வாழ்ந்து வந்தார்.

இவ்வாறான நிலையில், அவர் காடுகளில் இருக்கும் காய்களையும், பழங்களையும் உண்டு வாழ்ந்து வந்தார், அவர் கவனிப்பார் அற்று இருக்கின்றார். மனநலம் பாதித்துள்ளார் எனக் கூறி பொய்யான தகவல்களை சமூக ஊடகங்கள் மூலம் பரப்புவதால் நாம் தான் பல அசௌகரியங்களுக்கு முகம் கொடுக்க நேர்ந்துள்ளது.

மேலும், அவர் முன்னாள் பேராளி என்றும் அவரைப் பராமரிப்பதற்காக வெளிநாடுகளில் பலர் பணம் சேகரித்து வருவதாகவும் தகவல் கிடைத்துள்ளது. அவ்வாறான செயற்பாடுகளில் யாரும் ஈடுபட வேண்டாம்.

அவரை வைத்து சிலர் பணம் சம்பாதிக்க நினைக்கின்றார்கள். தற்போதும் அவரைப் பராமரிப்பதற்காக தினமும் மூவாயிரம் ரூபா பணம் பராமரிப்பவருக்கு வழங்கப்பட்டுக்கொண்டு தான் இருக்கின்றது.

இவ்வாறான நிலையில், வெளிநாட்டில் இருப்போர் அவர் தொடர்பில் தகவல் எதுவும் அறிய வேண்டுமாயின் எமது கிராமசேவகர் ஊடாக எம்மைத் தொடர்பு கொள்ளுங்கள். தங்களிற்கு தேவையான விடயங்களை உண்மை நிலையை நாம் கூறுவோம்” எனவும் தெரிவித்துள்ளனர்.