75-வது சுதந்திர தின விழா: ஐ லவ் இந்தியா செல்பி எடுத்துக்கொள்ள ஏற்பாடுகள்

75-வது சுதந்திர தின விழா கொண்டாட்டத்தையொட்டி சென்னை மாநகரம் மின்னொளி அலங்காரத்தில் ஜொலித்து வருகிறது. 75-வது சுதந்திர தின விழா வருகிற 15- ந்தேதி நாடு முழுவதும் வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது.

இதையொட்டி சென்னையின் பல இடங்களில் மின் விளக்குகள் அலங்காரம் செய்யப்பட்டு உள்ளது.சென்னையின் பழமை வாய்ந்த முக்கிய கட்டிடங்கள் அனைத்திலும் 75-வது சுதந்திர தின கொண்டாட்டத்தை யொட்டி வண்ண வண்ண மின்விளக்குகள் மற்றும் பலூன் அலங்காரங்கள் செய்யப்பட்டு பிரமாண்டமாக காட்சி அளித்து வருகின்றன.

75-வது சுதந்திர தினத்தை வரவேற்கும் விதமாக ஆர்வமுடன் மக்கள் அலங்கார பணிகளில் ஈடுபட்டு மகிழ்ச்சி அடைந்து வருகின்றனர். 75-வது சுதந்திர தினத்தை குறிக்கும் வகையில் பிரமாண்ட தேசிய கொடி பதாகைகள் அமைக்கப்பட்டு உள்ளன. மகாகவி பாரதியின் பாடல் வரிகளுடன் சுதந்திரப் போராட்ட வீரர்கள் பற்றிய தகவல்கள் அடங்கிய பதாகைகள்இ மூவர்ண கொடியுடன் அலங்கரிக்கப்பட்டு உள்ளது.

மெட்ரோ ரெயில் நிலைய உள்பகுதியில் இந்தியாவின் விடுதலைக்கு பாடுபட்ட சுதந்திர போராட்ட வீரர்களின் புகைப்படங்கள் இடம் பெற்று உள்ளன.ஐ லவ் இந்தியா என்ற வாசகத்துடன் செல்பி எடுத்துக்கொள்ளும் வகையிலும் அங்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. இதில் சிறுவர், சிறுமிகள், பயணிகள் அனைவரும் ஆர்வமுடன் செல்பி போட்டோக்கள் எடுத்து மகிழ்ச்சி அடைந்து வருகின்றனர்.