காணாமல் போனோர் தொடர்பான OMP தலைவரின் ‘பைலாக்கள்’ குறித்து கடும் விமர்சனம்.

இராணுவத்திடம் சரணடைந்தவர்கள் காணாமல் போனமைக்காக ஆதாரம் இல்லை என காணாமல் போனோர் அலுவலகத்தின் தலைவர் அண்மையில் சர்வதேச ஊடகங்களுக்கு தெரிவித்த கருத்து ‘பைலா’ என அம்பலமாகியுள்ளது.
காணாமல் போனவர்களில் பெரும்பாலானோர் விடுதலைப் புலிகளால் கடத்தப்பட்டவர்கள் அல்லது அவர்களது எதிர்த் தரப்பால் கடத்தப்பட்டவர்கள் என ரொய்ட்டர்ஸ் ஊடக நிறுவனத்திற்கு தெரிவித்த OMP தலைவர் மகேஷ் கட்டுலந்த, இராணுவத்திடம் சரணடைந்த பின்னர் காணாமல் போனதாகக் கூறப்படும் விடயத்தை கண்டித்துள்ளதோடு, அவ்வாறு நிகழ்ந்தமைக்கான எவ்வித சாட்சிகளும் இல்லையெனக் குறிப்பிட்டுள்ளார்.
போரால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சர்வதேச மனித உரிமை அமைப்புக்கள் மட்டுமன்றி காணாமல்போனோர் குறித்த அலுவலகமே இதுவரை ஏற்றுக்கொண்ட  தகவல்களை மறுப்பது அந்த நிறுவனத்தின் நம்பகத்தன்மையை கேள்விக்குறியாக்கியுள்ளதாக நாட்டின் சிரேஷ்ட மனித உரிமை ஆர்வலர் ஒருவர் குற்றம் சாட்டுகிறார்.
“வெளிநாடுகளில் ஐம்பது பேர் உள்ளனராம், அவர்களில் சிலர் புலிகளால் கொல்லப்பட்டுள்ளனராம். இது சமாளிக்கும் ஒரு கருத்து. ஏனென்றால் அந்த பெற்றோர் மிகத் தெளிவாக தமது உறவுகளை கையில் ஒப்படைத்தார்கள். எனவே, காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகத்தின் தலைவர் இவ்வாறான கருத்தை வெளியிட்டால், எந்த நபர் நம்பிக்கையுடன் இந்த அலுவலகத்தில் முறைப்பாடு செய்ய முடியும்.”
காணாமல் போனோர் தொடர்பான அலுவலகத்திற்கு முன்பாக ஒக்டோபர் 27ஆம் திகதி வியாழக்கிழமை இடம்பெற்ற போராட்டத்தை முன்னெடுத்த பின்னர் காணாமல்போனோர் குடும்ப ஒன்றியத்தின் தலைவர் பிரிட்டோ பெர்னாண்டோ இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்தார்.
காணாமற்போனதாகத் தகவல்கள் கிடைத்தாலும், சுமார் 50 பேர் வெளிநாட்டில் இருப்பதை தனது அலுவலகம் கண்டுபிடித்துள்ளதாக  OMP தலைவர் தெரிவித்துள்ளார்.
அலுவலகம், ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்திற்கு தேவையான தகவல்களை வெளியிடக்கூடாது என சுட்டிக்காட்டியுள்ள மனித உரிமை செயற்பாட்டாளர், ஆட்சிக்கு வந்த ஒவ்வொரு அரசாங்கமும் தாம் செய்த கொலைகளை மூடிமறைப்பதற்காகவே இவ்வாறான அறிக்கைகளை வெளியிட்டதாக வலியுறுத்துகின்றார்.
“அரசாங்கத்திற்கு வேண்டியதை தெரிவிக்காமல், இதில் காணப்படும் உண்மையை வெளிப்படுத்துங்கள். அரசாங்கத்திற்கு தேவையான விடயங்களையே வெளிப்படுத்துகின்றன. அனைத்து அரசாங்கங்களும் இதனையே செய்தன. தாங்கள் கொன்றவர்களை இறந்துவிட்டார்கள் என சொல்ல இந்த அரசுகளுக்கு முதுகெலும்பு இல்லை. பிறகு இது பொய் என்கிறார்கள்.”
தலைவர் மகேஷ் கட்டுலந்த தெரிவித்த 50 புலம்பெயர்ந்தவர்களின் விபரங்களை வெளியிடுமாறு பிரிட்டோ பெர்னாண்டோ சவால் விடுத்துள்ளார்.
“இப்போது அந்த ஐம்பது பேரையும் வெளிப்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம்.”