அரசாங்கத்தை கவிழ்க்கலாம், ஆனால் ‘அரசை’ அவ்வாறு செய்ய முடியாது – முன்னாள் எம்.பி சஞ்சீவ எதிரிமான்ன விளாசல்
C.G.Prashanthan Sri Lanka - Colombo Reporter for MEIVELI

தற்போதைய அரசாங்கத்தின் அமைச்சரான லால்காந்த மேற்கொண்டு வரும் செயற்பாடுகள், பிரித்தானியர் ஆட்சிக்காலத்தில் ஜான் டொய்லி ஆற்றிய சூழ்ச்சிமிக்க பாத்திரத்தையே நினைவூட்டுவதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சீவ எதிரிமான்ன தெரிவித்தார்.
பத்தரமுல்லயில் உள்ள கட்சித் தலைமையகத்தில் இன்று (2026.01.30) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட அவர், தேசிய மக்கள் சக்தி (NPP) என்பது ஒரு அரசாங்கம் மட்டுமே தவிர அதுவே ‘அரசு’ அல்ல என்பதைச் சுட்டிக்காட்டினார்.
ஒரு அரசாங்கத்தைத் தேர்தலில் தோற்கடிக்கவோ அல்லது கலைக்கவோ முடியும், ஆனால் ‘அரசு’ என்பது நிலையானது என்றும், அதனைத் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர நினைப்பது சர்வாதிகாரத்தின் வெளிப்பாடு என்றும் அவர் விமர்சித்தார்.
அமைச்சர் லால்காந்த அண்மையில் வெளியிட்ட “நாங்கள் அரசாங்கத்தைக் கைப்பற்றிவிட்டோம், ஆனால் இன்னும் அரசை (State) கைப்பற்றவில்லை” என்ற கூற்றானது அரசியல் அறிவியலின் படி ஆபத்தான முன்னுதாரணமாகும் என அவர் குறிப்பிட்டார்.
பிரான்ஸின் 14-ஆம் லூயி மன்னன் “நானே அரசு” என்று கூறியதைப் போன்றே தற்போதைய ஆட்சியாளர்களும் செயற்படுவதாகக் குற்றம் சாட்டிய சஞ்சீவ எதிரிமான்ன, அரசு என்ற எஜமானனின் சேவகனே அரசாங்கம் என்பதையும், மக்களின் விருப்பங்களை கொள்கைகளாக மாற்றுவதே அதன் பணி என்பதையும் அவர்கள் மறந்துவிட்டதாகத் தெரிவித்தார்.
மாற்றுக் கருத்துடைய அரசியல் பிரிவினரே இல்லாத ஒரு சமூகத்தை உருவாக்க அரசாங்கம் முயற்சிப்பதாகவும், தமது அரசியல் நிலைப்பாட்டிற்கு இணங்காத நிறுவனத் தலைவர்களைச் சுதந்திரமாகச் செயற்பட விடாமல் அரசாங்கம் தடுத்து வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

