பொலிஸாரை மிரட்டிய ஜீவன் தொண்டமானுக்கு எதிராக முறைப்பாடு

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும் நீர் வழங்கல் அமைச்சருமான ஜீவன் தொண்டமானுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு சமகி ஜன பலவேக வலப்பனை தொகுதி அமைப்பாளர் சட்டத்தரணி திருமதி ஹிரண்யா ஹேரத் நுவரெலியா மாவட்டத்திற்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஜே.ஏ.யு.பி.ஜயசிங்கவிடம் எழுத்துமூல முறைப்பாடு செய்துள்ளார்.

குறிப்பிட்ட முறைப்பாட்டில் பகவந்தலாவ பிரதேசத்தில் உள்ள அரச வங்கிக்கு வந்த  இளைஞர் ஒருவர் வாடிக்கையாளரின் கணக்கைப் பற்றி விசாரிக்கும் போது அந்த வங்கி அதிகாரிகள்  தகவல் தெரிவிக்க மறுத்துவிட்டனர். இது குறித்து வங்கி மேலாளர் பகவந்தலாவ  பொலிஸாரிடம்  முறைப்பாடு செய்தார்.

சந்தேக நபர் பகவந்தலாவ பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நீதவான் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக திருமதி ஹிரண்யா ஹேரத் முறைபாட்டில்  குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அந்த முறைப்பாட்டின் பிரகாரம் சந்தேக நபர்களை கைது செய்த பொலிஸாரை  பகவந்தலாவை நகர மையத்திற்கு வரவைத்து அதிகாரிகளை மிரட்டி அசௌகரியப்படுத்திய அமைச்சர் ஜீவன் தொண்டமானுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை எடுக்குமாறு முறைப்பாட்டில் குறிப்பிட்டுள்ளார்.