பிரித்தானியாவில் இடம்பெற்ற உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தனின் மாபெரும் நூல் அறிமுக விழா!

– மாமனிதர் உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தனின் தன்வரலாறு “விலங்கை உடைத்து” நூல் அறிமுக விழாவும் தமிழீழ எழுச்சிப்பாடல்கள் இசை நிகழ்சியும் –

தமிழீழ தேசியத் தலைவரால் வாழும் போதே மாமனிதர் விருது வழங்கி கெளரவிக்கப்பட்டவரும், 70 வருட விடுதலைப்போராட்டத்தில் தன்னை முழுமையாக அர்ப்பணித்து வாழும் வரலாறாக வாழ்ந்து கொண்டிருப்பவருமான
மாமனிதர் உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன் அவர்களின் “விலங்கை உடைத்து” என்னும் தன் வரலாற்று நூல் அறிமுக விழா இலண்டனின் கிரீன்போர்ட் (Greenford) பகுதியில் கடந்த சனிக்கிழமை (யூன் 21) பிரம்மாண்டமாக நடைபெற்றது. அதனை தொடர்ந்து அவரால் எழுதப்பட்ட விடுதலை கானங்கள் இசை நிகழ்ச்சியும் இசைமேதை கலைமாமணி தமிழ்இசை வேங்கை T L மகாராஜன் தலைமையில் இடம்பெற்றது.

மெய்வெளி வெளியீட்டகத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த விழாவில் பிரித்தானிய மூத்த பாராளுமன்ற உறுப்பினரான அதி மதிப்பிற்குரிய ஜோன் மக்டொனெல் அவர்கள் (The Rt Hon. John McDonnell MP) பிரதம விருந்தினராக கலந்துகொண்டு சிறப்பித்திருந்தார். இதுவரை கண்டிராத அளவில் பெரும் எண்ணிக்கையிலான மாநகர முதல்வர்கள் (Mayors), உள்ளூராட்சித் தலைவர்கள் (Councillors), கல்வியாளர்கள், கவிஞர்கள், கலைஞர்கள், முன்னாள் போராளிகள் மற்றும் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டு அரங்கம் நிரம்பி வழிந்தது. தேசிய நிறங்களான மஞ்சல் சிவப்பு கொடிகளாலும் தோரணங்களாலும் மண்டபம் அலங்கரிக்கப்பட்டிருந்தது.

உலகெங்கும் வாழும் மூத்த தலைவர்கள் மற்றும் கல்வியாளர்களின் காணொலி மூல வாழ்த்து செய்திகளுடன் அதிதிகள் வரவேற்கப்பட்டு, மங்கள விளக்கேற்றலுடன் விழா இனிதே ஆரம்பமானது. நிகழ்வின் சிறப்பு அதிதிகளான போற்றுதலுக்குரிய கிறொளளி மாநகர முதல்வியாகிய சர்மிளா சிவராஜா (Her Worshipful, the Mayor of Crawly Councillor
Sharmila Sivarajah மற்றும் போற்றுதலுக்குரிய சவுத்கோல் மேற்கு பிரதி மாநகர முதல்வியாகிய படுமா மொகமெட் (Her Worshipful the Deputy Mayor of Southall West, Councillor Faduma Mohamed ஆகியோரை தொடர்ந்து, விசேட விருந்தினர்களான உள்ளுராட்சித் தலைவர்கள் தயா இடைக்காடர் (Cllr Thaya Idaikkadar), குகா குமரன் (Cllr Kuha Kumaran), ஜோன் பால் (Cllr Jon Ball), அமர்ஜிற் ஜம்மு (Cllr Amarjit Jammu), சீமா குமார் (Cllr Seema Kumar), டாறிக் முகமட் (Cllr Tariq Mahmood), மொகின்டர் மித்தா (Cllr Mohinder Midha), ஐய்ஷா றாசா (Cllr Aysha Raza), சசி சுரேஷ் (Cllr Sasi Suresh), கிருஷ்ணா சுரேஷ் (Cllr Krishna Suresh), சுரிண்டர் ஹ்ஹூர் ஜச்சல் (Cllr Surinder Kaur Jassal), கிரகம் வில்லியம்சன் (Cllr Graham Williamson), டீ மார்டின் (Cllr Dee Martin), வர்லினி அலேக்சாண்டர் (Cllr Varlene Alexander), சசி மயில்வாகனம் (Cllr Sashi Mylvagan) மற்றும் முரளி குணராஜா (Cllr Murali Gunarajah) ஆகியோரும் மங்கள விளக்கை ஏற்றி சம்பிரதாயபூர்வமாக விழாவை ஆரம்பித்து வைத்தனர்.

அதனை தொடர்ந்து தமிழீழ விடுதலைக்காக உயிர்தியாகம் செய்த மாவீரர்களுக்கும் பொது மக்களுக்குமாக ஒருநிமிட அமைதி வணக்கம் செலுத்தப்பட்டது.

உணர்ச்சிக்கவிஞர் காசி ஆனந்தன் அவர்களால் எழுதி, கலைமாமணி T L மகாராஜன் அவர்களால் பாடப்பட்ட தமிழ் மொழி வாழ்த்து இசைக்கப்பட்டு, கலைமாமணி பிரேமலதா ரவீந்திரன் அவர்களின் நெறியாழ்கையில் நோவா லட்சுமிகாந்தன் அவர்களின் வரவேற்பு நடனம் இடம்பெற்றது.

அறிமுக நிகழ்வாக தமிழீழ விடுதலைப் போராட்டத்தை எழுத்துக்களாலும் கவிதைகளாலும் பாடல்களாலும் இன்றும் உயிர்ப்புடன் பயணிக்க வைத்திருக்கும் நூலாசிரியர் உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன் அவர்கள் பற்றிய ஒரு ஆவணப்படம் ஒளிபரப்பப்பட்டது. விடுதலைப்போராட்டத்தில் அவரின் பங்களிப்பு, தியாகங்கள் மற்றும் தேசிய தலைவருடனான நெருக்கம் உட்பட பலரும் அறிந்திராத அரிய தகவல்களையும் ஆதாரங்களையும் உள்ளடக்கியதாக அமைந்திருந்தது.

விழாவை தலைமை தாங்கிய ஊடகவியலாளரும் மெய்வெளி இயக்குனர்களில் ஒருவருமான திருமதி பிரேமலதா சாம் பிரதீபன் அவர்களின் வரவேற்பு உரையை தொடர்ந்து, சிறப்பு அதிதிகளாக வந்திருந்த போற்றுதலுக்குரிய மாநகர முதல்வியாகிய சர்மிளா சிவராஜா மற்றும் போற்றுதலுக்குரிய பிரதி மாநகர முதல்வியாகிய படுமா மொகமெட் ஆகியோரின் வாழ்த்து உரைகள் இடம்பெற்றன.

தொடர்ந்து விழாவின் பிரதான நிகழ்வான நூல் அறிமுகம் இடம்பெற்றது. மெய்வெளி நிறுவுனர், மூத்த ஊடகவிலாளர், எழுத்தாளர், கலைஞர் என பன்முக ஆளுமைகளை கொண்ட திரு சாம் பிரதீபன் அவர்கள் கவிஞர் காசி ஆனந்தன் அவர்களின் “விலங்கினை உடைத்து” தன்வரலாற்று நூலினை அறிமுகம் செய்து வைத்து சிறப்பு உரை நிகழ்த்தினார். அடுத்து சிறப்பு பேச்சாளர்களாக அழைக்கப்பட்டிருந்த தனிநாயகம் தமிழ் பாடசாலை அதிபரும் எழுத்தாளரும் இலக்கிய ஆர்வலருமான திரு துரைசாமி சிவபாலன் அவர்களும், PERL அமைப்பின் இடைக்கால நிறைவேற்றுப் பணிப்பாளரும் லண்டன் சிட்டி பல்கலைக்கழக ஒப்பீட்டு அரசியல் உதவிப் பேராசிரியருமாகிய முனைவர் மதுரா இராசரட்ணம் (Associate Professor of Comparative Politics at City St. George University of London) அவர்களும் நூல் பற்றி நயவுரைகளை வழங்கி சிறப்பித்தனர்.

பிரதம விருந்தினரான பிரித்தானிய மூத்த பாராளுமன்ற உறுப்பினர் அதி மதிப்பிற்குரிய ஜோன் மக்டொனெல் அவர்கள் முதல் பிரதியை வழங்கி வைக்க, தொழிலதிபரான ஜெராட் நிக்கஸ் அவர்கள் பெற்றுக்கொண்டார். இவர் கவிஞர் காசி ஆனந்தன் அவர்கள், 1982 ஆம் ஆண்டு தமிழீழ விடுதலை போராட்டத்துக்கு ஆதரவு தேடி பிரித்தானியா வந்திருந்தபோது பல பிரச்சார கூட்டங்களை ஏற்பாடு செய்தவர் என்பதும், கவிஞரின் நீண்ட கால நண்பர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அதனையடுத்து சிறப்பு பிரதிகளை போற்றுதலுக்குரிய மாநகர முதல்வியாகிய சர்மிளா சிவராஜா, போற்றுதலுக்குரிய பிரதி மாநகர முதல்வியாகிய படுமா மொகமெட் மற்றும் போற்றுதலுக்குரிய முன்னாள் மாநகர முதல்வியாகிய நகேஷ் நரேந்திரா ஆகியோர் வழங்கி வைக்க, மன்னார் மாவட்ட சிறப்பு தளபதி மாவீரர் லெப் கேணல் சுபன் அவர்களின் சார்பாக, திரு விநாசித்தம்பி தர்மலிங்கம் அவர்களும், தமிழீழ விடுதலைப்புலிகளின் அரசியல் துறை பொறுப்பாளர் மாவீரர் பிரிகேடியர் நடேசன் சார்பாக அவரின் மகனான திரு பிரபாத் அவர்களும், விடுதலைப்புலிகள் ஆரம்பித்த காலத்தில் தேசியத் தலைவரின் இரகசிய சந்திப்புக்கு தனது வீட்டில் இடம் வழங்கி உதவிய திருமதி பவானி வாகீசன் சார்பில் திரு திருமதி வாகீசன் தம்பதிகளும், இங்கிலாந்தில் வாழ்ந்துவரும் மூத்த மனநல மருத்துவதும் கவிஞர் காசி ஆனந்தன் அவர்களின் இனிய உறவினருமாகிய மருத்துவ கலாநிதி பாலசுப்பிரமணியம் மற்றும் அவரது மனைவி சகுந்தலா அவர்களும், மாவீர்ர் லெப்டினட் கேர்னல் குமரப்பா குடும்பம் சார்பில் திருமதி இரஜனி இராஜ்குமார் அவர்களும், கலைமாமணி தமிழ்இசை வேங்கை T L மகாராஜன் அவர்களும் பெற்றுக்கொண்டனர்.

தமிழ் ஆசிரியர், கவிஞர், JR Print அச்சக உரிமையாளர் என பல் முகம் கொண்டவரான திரு பால ரவி அவர்கள் உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன் அவர்களின் சாதனைகளை வியந்து கவிதை ஒன்றை வழங்கிதை அடுத்து விசேட விருந்தினராகிய கலைமாமணி தமிழ்இசை வேங்கை T L மகாராஜன் அவர்களின் சிறப்புரை இடம் பெற்றது.

அடுத்து இந்த விழாவின் கதாநாயகரான மாமனிதர் காசி ஆனந்தன் அவர்களின் ஏற்புரை காணொலி மூலம் வழங்கப்பட்டது. இந்தியாவில் கடவுச்சீ்ட்டு பறிக்கப்பட்ட நிலையில் இன்னும் வீட்டுக்காவல் கைதியாகவே வாழ்ந்துவரும் அவர் தான் அனுபவித்துவரும் துன்பங்களையும் எடுத்துக்கூறியதுடன், எந்த நிலை வரினும் தான் தமிழீழ விடுதலைக்கு போராடுவதை கைவிட போவதில்லை என்றும் சங்கல்பம் செய்தார். அத்துடன் சமகால அரசியல் நிலையை எடுத்துக்காட்டி, தமிழ் மக்கள் ஒன்றுபட வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார்.

நூல் அறிமுக விழாவின் இறுதியாக, இந்த “விலங்கை உடைத்து-தன்வரலாறு” நூலை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துக் கொண்டிருக்கும் நூலாசிரியர் உணர்ச்சி கவிஞர் காசி ஆனந்தனின் மகளும், ஆஸ்திரேலியாவில் உள நல மருத்துவராகவும், மருத்துவக் கல்லூரி விரிவுரையாளராகவும் பணியாற்றிக் கொண்டிருக்கும் மருத்துவர் அமுதநிலா காசி ஆனந்தன் அவர்களை நன்றியுரை வழங்கினார்.

முன்னாள் மன்னார் மாவட்ட அரசியல் துறை பொறுப்பாளராகிய திரு சுரேஸ், முன்னாள் யாழ் மாவட்ட மக்கள் முன்னணி அமைப்பாளரும் யாழ் மாவட்ட அரசியல் நிர்வாக பொறுப்பாளரும் ஆகிய திரு ராஜன், உலகத் தமிழர் பேரவையின் தலைவர் பழ நெடுமாறன், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, முன்னாள் பேராசிரியரும் முன்னாள் Amnesty International USA அமைப்பின் பணிப்பாளருமாகிய T குமார், தமிழ்நெட் இணையத்தள நிறுவுனரும் மூத்த ஊடகவியலாளருமாகிய திரு ஜெயச்சந்திரன் கோபிநாத் (ஜெயா) தமிழீழ திரைப்பட இயக்குனர் ரஞ்சித் யோசப் ஆகியோரின் வாழ்த்து செய்திகளும் ஒளிப்பதிவு மூலம் திரையிடப்பட்டன.

மதிய போசன உணவை தொடர்ந்து, நிகழ்வின் நிறைவாக கலைமாமணி தமிழ்இசை வேங்கை T L மகாராஜன் தலைமையிலான மாபெரும் தமிழீழ எழுச்சி கானங்கள் இசை நிகழ்வு இடம்பெற்றது. மாமனிதர் உணர்ச்சிக்கவிஞர் காசி ஆனந்தன் அவர்களால் எழுதப்பட்ட மிகப்பிரபலமான எழுச்சிப்பாடல்களை இசை மேதை T L மகாராஐன், செந்தூரன் மற்றும் சிறீபதி ஆகியோர் பாடினர். தாயக கவிஞர் புதுவை இரத்தின துரை அவர்களை நினைவு கூரும் வகையில் அவரால் எழுதப்பட்ட பாடல் ஒன்றும் பாடப்பட்டது. இவற்றுக்கான பின்னணி இசையை லண்டன் மெலடீஸ் (London Melodies) இசைக்குழுவை சேர்ந்த இசைக் கலைஞர்கள் வழங்கியிருந்தனர். கலாலயம் நாட்டிய கல்லூரி, நமது ஈழநாடு ஊடகம், தாய் TV, குயிக் புறடக்சன்ஸ் (Quick Productions), சிவசங்கர் ஆகியோரின் அனுசரணையுடன் இந்த நிகழ்வு சிறப்பாக நடைபெற்று இனிதே நிறைவு பெற்றது.