ஜனாதிபதி வேட்பாளர்களில் சமஸ்டியை வலியுறுத்துபவர்களுக்கு ஆதரவு:  சிவஞானம் சிறீதரன் தெரிவிப்பு

தற்போதைய ஜனாதிபதி வேட்பாளர்களில் யாராவது சமஸ்டியை வலியுறுத்தி வடக்கு கிழக்கில் தமிழர்கள் சுயாட்சியுடன் வாழ்வது தொடர்பாக தேர்தல் விஞ்ஞாபனத்தில் வலியுறுத்தினால் அவர்களுக்கு ஆதரவு வழங்குவது தொடர்பாக தமிழரசுக்கட்சி பரிசீலனை செய்யும் என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகவியலாளர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே இதனை தெரிவித்தார். எதிர்வரும் மாதம் 10, 11ஆம் திகதிகளில் மத்திய குழு கூடி பொது வேட்பாளரை ஆதரிப்பதா அல்லது தேர்தல் விஞ்ஞானத்தில் சமஸ்டியை வலியுறுத்தும் வேட்பாளரை ஆதரிப்பதா என்று முடிவு எடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார். மேலும் விக்கினேஸ்வரன் வடமாகாண சபையே நடத்த முடியாதவர் என்று சுமந்திரன் குறிப்பிட்டது தொடர்பாக ஊடக வியலாளர் கேள்வி கேட்ட போது தமது கட்சியைச் சேர்ந்தவரின் கருத்திற்கு வியாக்கினம் வழங்குது சரியான விடயம் அல்ல விக்கினேஸ்வரன் தான் வழங்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

இப்போதைய கால சூழலில் அனைவரையும் ஒன்றிணைத்து செல்ல வேண்டும் ஒற்றுமையை குழப்பி அதனை விட்டு பேசிக்கொண்டு இருந்தால் அடிப்படை அரசியலைக் கொண்டு செல்வதில் பிரச்சினை உள்ளது என்றும் குறிப்பிட்டார். மகிந்த ராஜபக்ச பிள்ளையானை நம்பி பொலிஸ் அதிகாரம் கொடுக்கலாமா என்று கேட்டிருந்தார். அதற்காகவே முன்னாள் நீதியரசரை களம் இறக்கி பொலிஸ் அதிகாரம் நிதி அதிகாரம் வழங்குமாறு கோரியிருந்தோம் எல்லாருடைய விருப்பத்திலே தெரிவு இடம்பெற்றது எனவும் தெரிவித்துள்ளார்.