கொழும்பில் வேலைக்காக சென்ற பதின்ம வயது  யுவதிக்கு காத்திருந்த அதிர்ச்சி.


கொழும்பில் வேலைவாய்ப்பை பெற்றுத்தருவதாக பதின்ம வயது சிறுமிகளை ஏமாற்றும் கும்பல் தொடர்பில் பொலிஸார் எச்சரித்துள்ளனர்.

தூர பிரதேசங்களிலுள்ள இளம் யுவதிகளை குறி வைத்து இவ்வாறான மோசடி கும்பல் செயற்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய கண்டி, வத்தேகம பகுதியை சேர்ந்த 16 வயதான பதின்ம வயது யுவதிக்கு சலூனில் வேலை பெற்றுத்தருவதாக கூறி, கொழும்பில் தகாத தொழில் ஈடுபடுத்தியமை தெரிய வந்துள்ளது.

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய தகாத தொழிலை நடத்தும் நிறுவனத்தின் முகாமையாளர் மற்றும் குறித்த யுவதியை வேலைக்கு அழைத்து வந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த இரண்டு நபர்களாலும் யுவதி தகாத வகையில் நடத்தப்பட்டு துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளார்.

பேஸ்புக்கில் பார்த்த விளம்பரத்தின் அடிப்படையில் கொழும்பில் வேலையை செய்ய குறித்த யுவதி வந்துள்ளார்.

அதன்படி இரத்தினபுரியை சேர்ந்த ஒருவர் தன்னை தொடர்பு கொண்டு தன்னிடம் சலூனில் வேலை உள்ளதாக கூறியதாகவும் கொழும்பிற்கு வருமாறு அழைத்ததாக பொலிஸாரிடம் குறிப்பிட்டுள்ளார்.

பின்னர் குறித்த சிறுமியை சந்தித்த இந்த நபர், தலவத்துகொட பிரதேசத்தில் அமைந்துள்ள மசாஜ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளார்.

வேலை வாங்கித் தருவதாக யுவதியை ஏமாற்றி இந்த இடத்தில் இணைத்த நபர், மசாஜ் நிலையத்திற்கு அழைத்து சென்ற உரிமையாளர், உரிமையாளரின் இரகசிய காதலி என கூறப்படும் 23 வயதுடைய யுவதி மற்றும் மசாஜ் மையம் இயங்கும் கட்டிடத்தின் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர்கள் நுகேகொட நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர். பொலிஸாரால் கைது செய்யப்பட்ட சிறுமி மருத்துவ பரிசோதனைக்காக களுபோவில போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.