ரணில் விக்கிரமசிங்க  தமிழர்களின் ஆதரவைப் பெறமுடியாது :  டிலான் பெரேரா தெரிவிப்பு.

ரணில் விக்கிரமசிங்க, ராஜபக்சக்களின் பக்கம் நிற்கும் வரையில் அவரால் வடக்கு மற்றும் மலையகத் தமிழர்களின் ஆதரவைப் பெறமுடியாது என பாராளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார். மேலும், நாட்டில் உள்ள வாக்காளர்களில் 40 வீதமானோர் யாருக்கு வாக்களிப்பது என்பதை இன்னும் தீர்மானிக்கவில்லை.

60 சதவீத வாக்குகளை வைத்துத்தான் கருத்துக் கணிப்புகள் வருகின்றன. அது உறுதியான முடிவாக அமையாது. வடக்கு, கிழக்கு மற்றும் மலையகத்தில் வாழும் தமிழ் மக்கள்இ ராஜபக்சக்களுடன் ரணில் விக்கிரமசிங்க இருக்கும்வரை அவருக்கு ஆதரவு வழங்கமாட்டார்கள். அதனால் வடக்கு, கிழக்கு மற்றும் மலையகத்தில் உள்ள மக்களுள் பெரும்பாலானவர்கள் ஐக்கிய மக்கள் சக்தி பக்கம்தான் தற்போது நிற்கின்றனர்.

ரணில் விக்கிரமசிங்க எப்படி தான் முயற்சித்தாலும் ராஜபக்சக்களுடன் இருக்கும்வரை அவரின் முயற்சி வெற்றியளிக்காது. தமிழ், முஸ்லிம் மக்கள் மத்தியில் என்னைப் போன்ற அரசியல்வாதிகளுக்கு வரவேற்பு உள்ளது. அந்த மக்களின் உரிமைக்காக முன்னின்றவன் நான். அதனால் சிங்களப் புலி என்றுகூட முத்திரை குத்தினர் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.