ஜனாதிபதி பதவியில் இருந்து என்னை வெளியேற்றுவதற்கான சதி’: நூலை வெளியிடுகிறார்  கோட்டாபய ராஜபக்ச

2019 நவம்பரில் தான் ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்ட காலத்திலிருந்து, சில வெளிநாட்டு சக்திகள் மற்றும் உள்ளூர் கட்சிகள் என்னை ஆட்சியில் இருந்து அகற்றும் நோக்கத்தில் இருந்ததாக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்தார்.

இன்று வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் கோட்டாபய ராஜபக்ச இதை குறிப்பிட்டுள்ளார். மேலும், ‘ஜனாதிபதி பதவியில் இருந்து என்னை வெளியேற்றுவதற்கான சதி’ என்ற தலைப்பில் புத்தகத்தை வெளியிடுவதாகவும் அறிவித்தார்.இந்த நாடு சுதந்திரமடைந்த முதல் அறுபது வருடங்களில் ஒருபோதும் அனுபவித்திராத வகையில் இன்று வெளிநாட்டுத் தலையீடும் உள் அரசியலின் சூழ்ச்சியும் இலங்கையில் உள்ளதாக ராஜபக்ச கூறினார்.

தம்மை வெளியேற்றுவதற்கான அரசியல் பிரச்சாரம் இலங்கையின் அரசியலில் ஒரு புதிய அம்சத்தைக் கொண்டுவந்தது என்றும், சுதந்திரம் பெற்றதில் இருந்து தேர்தலுக்குப் பிறகு அமைதியான அதிகாரப் பரிமாற்றங்களை மட்டுமே இந்நாடு அனுபவித்து வந்ததாகவும் அவர் கூறினார். எனவே, 2022 ஆம் ஆண்டு நிகழ்வுகள் இந்த நாட்டின் எதிர்காலத்திற்கு கடுமையான தாக்கங்கள் நிறைந்தவை என்று ராஜபக்ச கூறினார். சர்வதேச ரீதியில் அனுசரணையளிக்கப்பட்ட ஆட்சி மாற்ற நடவடிக்கையின் முதல் அனுபவத்தை புத்தகம் விளக்குகிறது’ என்றார்.