மன்னார் – 10 வயது சிறுமி துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டு கொலை ,பிரேத பரிசோதனை அறிக்கை.

மன்னாரில் 10 வயது சிறுமி ஒருவர் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டு கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக பிரேத பரிசோதனையில்  அறிக்கையிடப்பட்டுள்ளது.

தலைமன்னார் ஊர்மனை கிராமத்தில் 10 வயது சிறுமியொருவர் நேற்று வெள்ளிக்கிழமை சடலமாக மீட்கப்பட்டநிலையில், இன்று  சனிக்கிழமை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிறுமியின் சடலம் உடற்கூற்று பரிசோதனைக்கு உள்ளாக்கப்பட்டது.

அதன் போதே , சிறுமி வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்டுள்ளார் என கண்டறியப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் சிறுமியின் வீட்டிற்கு அருகிலுள்ள தென்னந்தோப்பில் வேலை செய்த 52 வயதான திருகோணமலை – குச்சவெளியைச் சேர்ந்த ஒருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சிறுமி நேற்று முன்தினம் வியாழக்கிழமை மாலை காணாமற்போயுள்ளதாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டது.

இதனையடுத்து, பிரதேச மக்கள் தேடுதலில் ஈடுபட்ட போது, தென்னந்தோட்டத்தில் இருந்து நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை காலை சிறுமியின் சடலம் மீட்கப்பட்டது.

சிறுமியின் தாயும் தந்தையும் புத்தளம் – பூக்குளம் கிராமத்தில் வசித்து வருவதுடன், பாடசாலை செல்வதற்காக சிறுமியும் அவரது இரு மூத்த சகோதரிகளும் சகோதரனுடன் ஊர்மனை கிராமத்திலுள்ள அம்மம்மாவின் வீட்டில் வசித்து வந்த நிலையிலேயே இச்சம்பவம் நடைபெற்றுள்ளது.