காக்கைகளும் மைனாக்களும் மீண்டும் எழ முயல்கின்றன: சஜித் பிரேமதாச.

15 இல் இருந்து 18 வீதமாக வற் வரியை அதிகரித்து நாட்டையே வங்குரோத்தாக்கிய ஜனாதிபதியின் எடுபிடிகளும் 7 மூளைகளை கொண்ட காக்கைகளுக்கு மைனாக்களும் மீண்டும் எழுச்சி பெற கடும் பிரயத்தனம் எடுத்து வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சக்தி, ஏனைய கட்சிகளைப் போல் ஊடகங்களில் வந்து கோப்புகளை காட்டி போலி அரசியல் செய்யாது. நாட்டை வங்குரோத்தடையச் செய்தவர்கள் யார் என்பதை நடைமுறையில் சட்டத்தில் நீதிமன்றமும் வெளிப்படுத்திவிட்டது என்றும் அவர் கூறினார்.

பியகம பிரதேசத்தில் நேற்றைய தினம் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மேற்கண்டவாறு கூறினார்.

‘‘நாட்டில் வறுமை 30 இலட்சத்திலிருந்து 70 இலட்சமாக அதிகரித்திருக்கும் நேரத்தில், வறிய மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கான முறையான வேலைத்திட்டம் எதுவும் அரசாங்கத்திடம் இல்லை.

தேர்தலின் போது மக்களுக்கு அதிகாரம் வழங்கப்படுவதாக கூறப்பட்டாலும், ஆட்சிக்கு வந்த பின் அரசியல்வாதிகளே தீர்மானங்களை எடுக்கின்றனர்.

இந்நிலையை மாற்ற வேண்டிய தருணம் வந்துள்ளது. கிராமத்திலும் நகரத்திலும் முடிவெடுக்கும் அதிகாரத்தை இளைஞர்களுக்கு வழங்குவதே ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் இலக்கு.

ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் இளைஞர்களுக்கும் பெண்களுக்கும் முடிவெடுக்கும் உரிமை வழங்கப்படும். நாட்டில் சிறுவயது முதலே கல்வியை மேம்படுத்த வேண்டும்.

பிரபஞ்சம், மூச்சுத் திட்டங்களை எதிர்க்கட்சி செயல்படுத்தியபோது அரசாங்கம் சேறுபூசும் செயற்பாடுகளை முன்னெடுத்தாலும்,ஐக்கிய மக்கள் சக்திக்கு பெறப்பட்ட ஒவ்வொரு நிதியும் வங்குரோத்து நிலையில் உள்ள நாட்டின் சுகாதாரம் மற்றும் கல்வி முறையை மேம்படுத்தவே பயன்படுத்துகிறது.‘‘ எனவும் எதிர்க்கட்சித் தலைவர் இங்கு தெரிவித்தார்.