தேசத்தை துண்டாட நினைப்பவர்களை பாஜக அரசு ஒருபோதும் விடாது: வானதி சீனிவாசன் அறிக்கை.

தேசத்தை துண்டாட நினைப்பவர்களை பாஜக அரசு ஒருபோதும் சகித்துக் கொள்ளாது. பிரிவினைவாதம் பேசுவது தான் கருத்துரிமையா?, திமுக பற்றி பெரியார் ஈ.வெ.ரா. பேசிய கருத்துக்களை தமிழ்நாடு சட்டமன்றத்தில் பேச திமுக அரசு அனுமதிக்குமா? என பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில், மாநிலங்களவையில் திமுக எம்.பி. அப்துல்லா, உரையாற்றும்போது சுட்டிக்காட்டிய தந்தை பெரியாரின் மேற்கோளுக்கு பா.ஜ.க.வினர் எதிர்ப்பு தெரிவித்தனர். பெரியாரின் பெயரும் அவைக்குறிப்பிலிருந்து நீக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்திலேயே கருத்துரிமையின் கழுத்து நெரிக்கப்பட்டுள்ளது. மக்களின் மனங்களில் நிலைத்து நின்று, வகுப்புவாதிகளை இன்றளவும் அச்சுறுத்தும் தந்தை பெரியாரின் பெயரை எங்கும், எப்போதும், எந்தச் சூழலிலும் பயன்படுத்துவோம் என, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியிருக்கிறார். மாநிலங்களவையில் திமுக எம்பி அப்துல்லாவின் பேச்சு முழுக்க, முழுக்க உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிரானது.

தேசத்தை துண்டாட வேண்டும் என்று வெவ்வேறு வார்த்தைகளில் அப்துல்லா பேசியதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த மாநிலங்களவை தலைவர் ஜெகதீப் தங்கர், உச்ச நீதிமன்ற தீர்ப்பு அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக பேசுகிறீர்கள், நாடாளுமன்ற மாநிலங்களவையை தவறாகப் பயன்படுத்துகிறீர்கள் எனக்கூறி அப்துல்லா பேசிய தேசவிரோதக் கருத்துக்களை நீக்கியிருக்கிறார்.

தமிழ்நாடு மக்கள் உள்பட பாரத நாட்டு மக்கள் அனைவரும் பிரிவினைவாதத்தை ஒருபோதும் ஏற்க மாட்டார்கள்.  சுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும். தேசம் இல்லாவிட்டால் எதுவும் இல்லை. திமுக எம்.பி.யின் பிரிபினைவாத கருத்துக்களை, அக்கட்சியுடன் கூட்டணி வைத்துள்ள காங்கிரஸ் ஏற்கிறதா என்பதை தெளிவுபடுத்த வேண்டும். இல்லையெனில் அப்துல்லாவின் பேச்சுக்கு குறைந்தபட்சம் கண்டனமாவது தெரிவிக்க வேண்டும். தேசத்தை துண்டாட நினைப்பவர்களை பாஜக அரசு ஒருபோதும் சகித்துக் கொள்ளாது என கூறியுள்ளார்.