மாவீரர் தின நிகழ்வுகளில் பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டதைக் கண்டித்து கிளிநொச்சி வளாக மாணவர் ஒன்றியம் என்ற அநாமதேய அமைப்பு போராட்டம்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கிளிநொச்சி வளாகத்தில் மாவீரர் தின நிகழ்வுகளில் பங்கேற்ற மாணவர்களையும் அதற்கு அனுமதி வழங்கிய பீடாதிபதிகளையும் தண்டிக்க வலியுறுத்தி திடீரென முளைத்த கிளிநொச்சி வளாக மாணவர் ஒன்றியம் என்ற அநாமதேய அமைப்பு எதிர்வரும் 7ஆம் திகதி வியாழக்கிழமை ஏ- 9 வீதியை மறித்துக் கவனயீர்ப்புப் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதற்கான முன்னறிவித்தல் நேற்றிரவு கிளிநொச்சி வளாகத்தினுள் அடங்கும் சகல பீடங்களினது பீடாதிபதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. கடந்த 26ஆம் திகதி தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வே.பிரபாகரனின் பிறந்த நாளையும், மறுநாள் 27 ஆம் திகதி அந்த அமைப்பிலிருந்து உயிர்நீத்தவர்களின் நினைவு தினத்தை கடைப்பிடித்தமையும் கிளிநொச்சி வளாகத்தில் அமைதியின்மையை ஏற்படுத்துவதோடு இன முரண்பாடுகளை தோற்றுவிக்கும் என சிங்கள மாணவர்கள் சிலர் கடந்த முதலாம் திகதி வெள்ளிக்கிழமை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுத் தலைவருக்கு அநாமதேயமாக முறைப்பாடுகளை மேற்கொண்டிருந்தனர்.

இத்தகைய அநமாதேய முறைப்பாடுகள் பல வெவ்வேறு பெயர்களில் அனுப்பப்பட்டதன் பின்னணியில் கிளிநொச்சி வளாக விரிவுரையாளர் ஒருவர் நேரடியாகச் சம்பந்தப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.அதன் தொடர்ச்சியாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இதுவரை இயங்காத – பதிவு செய்யப்படாத கிளிநொச்சி வளாக மாணவர் ஒன்றியம் என்ற பெயரில் பீடாதிபதிகளுக்குக் கடிதம் ஒன்று நேற்றிரவு அனுப்பப்பட்டுள்ளது.

மேலும், நாளை 5ஆம் திகதிக்குள் நிகழ்வுகளில் ஈடுபட்ட மாணவர்களையும் விவசாய பீடாதிபதியையும் உள்நுழைவுத் தடை மூலம் இடைநிறுத்தி விசாரணைகளை ஆரம்பிக்க வேண்டும் எனவும் நாளை மறுதினம் 6ஆம் திகதிக்குள் தமக்குச் சாதகமான பதில் வழங்காதுவிடின் கிளிநொச்சி பொலிஸாரின் உதவியுடன் நீதிமன்ற கட்டளையை ஒன்றைப் பெற்று ஊடகங்களுக்கு அறிவிக்கப்பட்டு 7ஆம் திகதி திட்டமிட்டபடி போராட்டத்தை முன்னெடுப்போம் என்றும் அந்த அநாமதேய கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.