மாநிலத்தில் முதலமைச்சர் வேந்தராக இருக்கும் ஒரே பல்கலைக்கழகம் ஜெயலலிதா இசை மற்றும் கவின் பல்கலைக்கழகம்.

இன்று சென்னை கலைவாணர் அரங்கில் ஜெயலலலிதா இசை மற்றும் கவின் பல்கலைக்கழகத்தின் 2வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதில் பல்கலைக்கழக வேந்தராக இருக்கும் மாநில முதல்வர் மு.க.ஸ்டாலின் பட்டங்களை அளித்தார். மாநிலத்தில் முதல்வர் வேந்தராக பொறுப்பில் இருக்கும் ஒரே பல்கலைக்கழகம் ஜெயலலலிதா இசை மற்றும் கவின் பல்கலைக்கழகம் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த பட்டமளிப்பு விழாவில், பிரபல திரைப்பட பாடகி பி.சுசீலாவுக்கு கவுரவ டாக்டர் பட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். மேலும் இசை கலைஞர் பி.எம்.சுந்தரம் அவருக்கும் டாக்டர் பட்டத்தை முதல்வர் வழங்கினார்.  அதன் பிறகு பேசுகையில், தான் பாடகி பி.சுசீலாவின் ரசிகர் என வெளிப்படையாக கூறினார். மேலும் இதனை இன்று மேடைக்கு வருமுன்னே அவரை சந்தித்த உடன் அவரிடமே கூறிவிட்டேன் என மேடையில் கூறி பி.சுசீலா பாடிய ‘நீ இல்லாத உலகில் நிம்மதியில்லை’ என்ற பாடலை மேடையில் பாடி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.

அடுத்து, மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தான், இந்த பல்கலைக்கழகம் 2013இல் தொடங்கப்பட்ட போது, மாநில முதல்வர் தான் வேந்தராக இருக்க வேண்டும் என உத்தரவிட்டார். மாநிலத்தில் முதலமைச்சர் வேந்தராக இருக்கும் ஒரே பல்கலைக்கழகம் ஜெயலலிதா இசை மற்றும் கவின் பல்கலைக்கழகம் தான் அதற்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள் என வெளிப்படையாக கூறினார் தமிழக முதல்வர். மேலும், நான் வேந்தர் பதவி குறித்த அரசியல் பேச விரும்பவில்லை. அதற்கான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. உச்சநீதிமன்ற நீதிபதிகள் நல்ல கருத்துக்களை நேற்று கூறியுள்ளனர். விரைவில் நல்ல முடிவுகள் வரும் எனவும் முதல்வர் கூறினார்.