சாம் பிரதீபனின் “தரையில் விழுந்த பூ”

- மனிதர்களை மறந்த மூதாட்டியின் கதை 1 -

எனக்கு காரணம் தெரியாது. ஆனால் என்னை அது சங்கடம் செய்தபடி இருக்கிறது. இப்போது நான் உடனே எழுந்து அதை முடிக்க வேண்டியுள்ள அவசரத்தில் இருக்கிறேன். இல்லையென்றால் அது என்னை தொந்தரவு செய்தபடியே இருக்கும்.

இது நான் விரும்பி ஏற்றுக்கொண்ட ஒரு வாழ்க்கை அல்ல. எப்போதிருந்து எப்படி எனக்குள் இது வந்து புகுந்து கொண்டது என்பதை இதுவரை என்னால் சரியாக தீர்மானம் செய்துகொள்ள முடியவில்லை. இதிலிருந்து மீண்டு வர வேண்டும் எனத் தான் நினைக்கிறேன் ஆனால் எந்த உபாயத்தையும் எனக்கு சொல்லித் தரும் நிலையில் யாரும் இல்லை என்பது மட்டும் இப்போதைக்கு எனக்குத் தெரிந்திருக்கிற உண்மை.

 

நான் உண்மையில் களைத்துப் போகிறேன் ஒவ்வொரு தடவையும் இந்த தொந்தரவில் இருந்து என்னைச் சரி செய்து கொள்வதில். இதோ ஒரே ஒரு பூ, கூட்டிப் பெருக்கிய எனது முற்றத்தில் விழுகிறது. முன்னெப்போதோ எனக்கு மிக நெருக்கமான யாரோ ஒரு மனிதர் நட்டு வளர்த்த அந்த நித்தியகல்யாணி மரத்தில் இருந்து தான் அந்த வெள்ளை நிறப் பூ இப்போது பதினொராவது தடவையாக இன்று விழுகிறது.

 

ஓரே மாதிரியாக இருக்கும் வெற்று நிலத்தில் விழுந்துகிடக்கும் ஒற்றைப் பூவைப் பார்ப்பதில் எனக்கு இருக்கும் சங்கடத்தின் துயரத்தை எனக்கு சொல்லத் தெரியவில்லை. சற்று முன்னர் விழுந்த ஒற்றை இலை கூட அதே போலொரு சங்கடத்தைத் தான் எனக்கு தந்திருந்தது. பூக்கள் விழுவதிலோ இலைகள் உதிர்வதிலோ எனக்கொன்றும் விருப்பக்குறைவு கிடையாது. ஆனால் ஒரே மாதிரியாக இருக்கும் முற்றத்தில் தனியே துருத்திக்கொண்டு தெரியும் ஒற்றை இலை குறித்தோ அல்லது ஒரு பூ குறித்தோ என் பார்வைச் சமநிலை குழம்புகிறது. பதினொராவது தடவையும் நான் எழுந்து அதை எடுத்து அப்புறப்படுத்தவேண்டியிருக்கிறது.

 

கறள் ஏறியபடி சுற்று மதிலில் சும்மா கொழுவியிருக்கிறது என் வீட்டு கதவு. யாரோ ஒருவன் திறந்தபடி வருகிறான். அவன் உள்ளே வருவதற்கு முதல் கவிழ்ந்து விழுந்து கிடக்கும் அந்தப் பூவை எடுத்து எறிந்து விட எட்டி நடக்கிறேன். இரண்டு அடி எடுத்து வைத்தாலே மூச்சு வாங்கும் களைப்பு எனக்கு. பூவை எடுத்து எறிந்துவிட்டு இளைத்தபடி நிற்கிறேன். இதோ அவன் என்னை நெருங்குகிறான்.

 

நேற்றைக்கோ அல்லது இன்று காலையோ இல்லை சற்று முன்னரோ தெரியாது இவனைப் போல ஒருவன் இப்படி வந்து எனக்கு முன்னால் நின்றவன் என்று நினைக்கிறேன். ஆனால் இவனைப் போலவே அவனையும் யாரென்று எனக்குத் தெரியாது. மனிதர்களை நினைவு வைத்திருக்கும் எல்லைக் கோட்டை நான் எப்போது தாண்டினேன் எனத் தெரியவில்லை. ஏதோ ஒரு காரணத்தால் நான் தாண்டி வந்திருக்கிறேன் என்பது தெரிகிறது.எனது தனிமையோ அல்லது நிறைவேறாத எனது ஆசைகளின் கூட்டுத்தொகையோ எனது முதுமையோ இதர நோய்களோ அதற்கு காரணமாக இருக்கலாம். என் குறித்து ஆராட்சி செய்யும் திராணி இப்போதெல்லாம் எனக்கில்லை. பூக்களையும் இலைகளையும் எடுத்து எறிவதிலேயே எனது நாட்கள் கரைந்தபடியிருக்கின்றன.

 

“என்னை யாரெண்டு தெரியுதா?”
இது தான் இப்போது வந்தவன் கேட்ட முதல் கேள்வி. இதற்கு முதல் வந்தவன் கேட்டுவிட்டுப் போன கடைசிக் கேள்வியும் இதே போல ஒன்றுதான். ஆனால் சரியாக நினைவில்லை. எனது நினைவுகள் குறித்த இந்தக் கேள்விகள் என்னை சஞ்சலப்படுத்துகிறது என்பது இங்கு வந்து வந்து போகும் ஒருவருக்கும் புரியதில்லை என நினைக்கிறேன். அவர்களை எனக்குத் தெரியும் என நிரூபிக்க நான் நிறைய அந்தரப்பட்டபடியிருக்கிறேன்.
“பின்ன தெரியாதா எனக்கு. என்ன நினைச்சிங்கள் என்னைப் பற்றி”
மனிதர்களை நினைவில் வைத்திருக்கும் எல்லைகளைத் தாண்டியபின்னர் நான் கையாளும் உபாயத்தை உடைத்துப் போடத்தான் இங்கு வருபவர்கள் எல்லோரும் முனைந்தபடியிருக்கிறார்கள்
“அப்ப நான் யாரெண்டு சொல்லண பாப்பம்”
இப்பிடித்தான் அவன் அடுத்த கேள்வியை கேட்பான் என்று எனக்கு தெரியும் ஆனால் இதற்கு முந்தியவன் கேட்ட இந்த இரண்டாம் கேள்விக்கு நான் அப்போது கையாண்ட உபாயத்தை இப்போது மறந்து போயிருப்பேன் என்று நினைக்கிறேன். பரீட்சைக்கு தயார்ப்படுத்தும் பள்ளி மாணவியைப்போல் வேறொரு பதிலை நான் தேடிக் கண்டுபிடிக்க படாத பாடு படவேண்டியிருக்கிறது.
“அப்ப நான் யாரெண்டு சொல்லண பாப்பம்”
இந்தா கேட்டுவிட்டான். கேட்பவர்களுக்கு எப்போதும் சலனங்கள் இல்லை. அள்ளி இறைக்கும் ஆற்றல் அவர்களுக்கிருக்கிறது. பூக்களை ஒவ்வொன்றாய் எடுத்தெடுத்து எறிவதைப் போலவே இந்தக் கேள்விகளுக்கெல்லாம் பதில் பொறுக்குவது என் களைப்பை இன்னும் அதிகமாக்கியபடியே இருக்கிறது. கேள்விகைளைக் கேட்பதற்கப்பால் என்னிடம் பேசுவதற்கு இப்போது இங்கு வரும் மனிதர்களிடம் எதுவுமில்லை. அவனுக்கு பதில் தேடும் இடைவெளியில் பழுத்த நித்திய கல்யாணி மரத்து இலையொன்று எனக்கருகில் ஆடி ஆடி விழுகிறது. அவனது கேள்வியை விட இந்த பழுத்து விழுந்த இந்த ஒற்றை இலை கூட்டிப் பெருக்கியுள்ள என் முற்றத்தில் கிடந்து என்னை மீண்டும் சங்கடப்படுத்துகிறது.

 

“சொல்லணண பாப்பம் நான் யாரு உனக்கு”
இவர்கள் விட மாட்டார்கள். வைத்தியர்களைத் தவிர இங்கு வரும் எல்லோரும் என் நினைவுகளை பரிசோதிக்க கங்கணம் கட்டி நிற்கிறார்கள்.
“நீயா சரி சொல்லு பாப்பம் நீ யார் எண்டு”
கேள்விகளை கேள்விகளால் வெல்லப் பார்ப்பது இப்போது தோன்றிய ஒரு புதிய சூட்சுமம்.
“நான் உன்னைய கேட்டா நீ திரும்ப என்னைய கேக்கிறியா மனுசி”
கேட்டுவிட்டு தன்னோடு வந்த தனக்கருகில் நிற்கும் மற்றவனைப் பார்த்துச் சிரிக்கிறான் இவன்.
“எடேய் நீ எப்பிடி இருக்கிறாய்? சுகமா இருக்கிறியா?”
கேள்வி கேட்பவளாய் என்னை மாற்றியபடி பதிலுக்கானவள் என்ற என் இருப்பை மாற்றப் பார்க்கிறேன்
“முதல்ல நான் யாரெண்டு சொல்லண”
அவன் விடவே மாட்டான். அவன் மட்டுமல்ல இப்போதெல்லாம் இங்கு வரும் எவரும் என்னை விடவே மாட்டார்கள்
“ஆ…நீ என்ர அண்ணன்”
“அண்ணனா!!!!!”
இருவரும் கெக்காளம் இட்டுச் சிரிக்கிறார்கள். இனி இவர்கள் இங்கிருந்து போகும் வரை இவர்களுக்கு நானும் எனது பதில்களும் நல்ல நகைச்சுவைப் பொருள்கள்.

 

கடந்து விட்டுப் போகும் மனிதர்களையும் நிகழ்ந்து விட்டு மறையும் சம்பவங்களையும் எனக்கு நினைவில் வைத்திருக்க முடியவில்லை. ஆனால் அந்தந்தக் கணங்களில் நான் நிராகரிக்கப்படுகிறேன் என்பதையும் என் மறதி குறித்து எள்ளி நகையாடப்படுகிறேன் என்பதையும் என்னால் உணர முடியும் என்பது இப்போதெல்லாம் எனக்கு முன் தோன்றி மறையும் மனிதர்களுக்குப் புரிவதில்லை.

 

இன்று இது பதினெட்டாவது தடவை என்று நினைக்கிறேன் நித்திய கல்யாணி மரத்தில் இருந்து வழமையைக் காட்டிலும் கொஞ்சம் பெரிதான பூ இதோ இங்கே விழுகிறது. எடுத்து குப்பைக்கூடைக்குள் எறிந்துவிட்டு களைத்தபடி நிமிர்கிறேன்.
மனுசிக்கு 72 வயது என்னை தன்ர அண்ணாவாமடா….
சிரித்தபடி கொளுவிய கதவைத் தாண்டிப் போகும் அந்த மனிதர்கள் சற்று முன் என்னுடன் என்ன பேசினார்கள் என்று எனக்கு நினைவில்லை. ஆனால் மரத்தில் இருந்து விழத் தொடங்கியுள்ள இன்னுமொரு பூ என்னை சங்கடம் செய்யத் தொடங்குகிறது. இந்த மரங்கள் தமது பூக்களைத் தம்முடனே வைத்திருந்தால் என்ன?
 – பூக்கள் இன்னமும் விழும் –