நுவரெலியாவில் கத்தி குத்து ஒருவர் படுகாயம்.

செ.திவாகரன் டி.சந்ரு.

நுவரெலியா பிரதான நகரில் இன்று காலை இடம்பெற்ற கத்தி குத்து சம்பவத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

நுவரெலியா பிரதான நகரில் நடைப்பாதையில் பழங்கள் விற்பனை செய்யும் ஒருவருடன் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றிய நிலையில் இந்த கத்தி குத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இதில் படுகாயமடைந்த நுவரெலியா பம்பரகலை தோட்டத்தை சேர்ந்த 33 வயதுடைய ஆறுமுகம் ஹாரியதாஸ் என்ற நபர் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவத்தில் கத்தியால் குத்திய பழங்கள் விற்கும் வியாபாரி தானாகவே நுவரெலியா பொலிஸ் நிலையத்தில் சரணடைந்ததாக சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவரும் நுவரெலியா பொலிஸார் தெரிவித்தனர்.