20000 ரூபாய்க்கு விற்கப்பட்ட களுத்துறை 16 வயது மாணவி.

களுத்துறையில் ஐந்து மாடி விடுதி ஹோட்டலில் மூன்றாம் மாடியிலிருந்து முழு நிர்வாணமாக விழுந்து உயிரிழந்த 16 வயதான பாடசாலை மாணவி பணத்துக்காக விற்கப்பட்டுள்ளார் என்று நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான வழக்கு, இன்று களுத்துறை நீதிவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.இதன்போது, குறித்த மாணவி பணத்துக்காக விற்கப்பட்டுள்ளார் என்று குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினர் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த மாணவியைச் சந்திப்பதற்குச் சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபரிடம் மாணவியின் நண்பியின் காதலன் 20 ஆயிரம் ரூபா பணம் கோரியுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.பிரதான சந்தேகநபரும் மாணவியைச் சந்திப்பதற்கு, முற்பணமாக 12 ஆயிரம் ரூபாவை மாணவியின் நண்பியின் காதலனிடம் கொடுத்துள்ளார் என்று விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இதேவேளை, சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டிருந்த பிரதான சந்தேகநபரின் சாரதியாகச் செயற்பட்டவர் மாணவியின் நண்பி மற்றும் நண்பியின் காதலன் ஆகியோர் எதிர்வரும் 26ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பிரதான சந்தேகநபர் உள்ளிட்ட சந்தேகநபர்கள் நால்வரிடமும் வாக்குமூலங்களைப் பதிவு செய்யக் குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. அத்துடன், இந்தச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டிருந்த விடுதி உரிமையாளரின் மனைவி இன்று பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.