பொது வேட்பாளர் தமிழர் வந்தால் ரணில் பேச வருவார்: கோவிந்தன் கருணாகரம் தெரிவிப்பு.

தமிழர்கள் தங்களது ஒற்றுமையை காட்டுவதற்கு ஜனாதிபதி தேர்தலை பயன்படுத்த வேண்டும் என மீண்டும் மீண்டும் தமிழீழ விடுதலை இயக்க நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் வலியுறுத்திவருகின்றார்.

ரணிலுடன் நெருங்கிய பின்கதவு உறவை டெலோ பேணி வருவதாக கூறப்படுகின்ற நிலையில் கோவிந்தன் கருணாகரம் கருத்து கேள்விகளை எழுப்பியுள்ளது. யாழ். ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது கருத்து வெளியிட்டுள்ள அவர் ஜனாதிபதி முறைமை வந்து ஆறு ஜனாதிபதிகள் மக்களால் தேர்வு செய்யப்பட்டு இருக்கின்றார்கள். கடந்த 6 ஜனாதிபதிகளில் தமிழ் மக்கள் விரும்பி இரண்டு ஜனாதிபதிகளை கொண்டு வந்திருந்தோம். அவர்கள் எங்களுக்கு எதுவுமே செய்யவில்லை. எங்களது இனப்பெருச்சினை தீர்வுக்காக எதுவுமே செய்யவில்லை.

இன்னும் இன்னும் நாங்கள் சிங்கள ஜனாதிபதி வேட்பாளர்கள் என்று வாக்களித்து ஏமாறாமல் எங்களது ஒற்றுமையை நாங்கள் காட்ட வேண்டிய ஒரு தேவை இருக்கின்றது.  வடகிழக்கை சேர்ந்த தமிழ் தேசிய கட்சிகள், சிவில் சமூக பிரதிநிதிகள், புலம்பெயர் தேசத்தில் இருக்கும் தமிழ் நலன் விரும்பிகள் என  நாங்கள் அனைவரும் ஒன்றிணைந்தால், எந்த ஒரு வேட்பாளருக்கும் 50 வீதத்துக்கு மேலே வாக்குகளை பெற்று வெல்ல முடியாத சூழ்நிலை உருவாகும் என்கின்ற நேரத்திலே சில வேளைகளில் எங்களுடன் பேசலாம். அதனால் ஒரு பொது வேட்பாளர் தற்போதைய நிலைமையில் தேவை பாடாக இருக்கின்றது.

இலங்கை தமிழரசுக் கட்சி பொது வேட்பாளர் தொடர்பில் தங்களுக்குள்  ஒரு முடிவு எடுப்பதற்கு இரண்டு கிழமை அவகாசம் கேட்டிருக்கின்றார்கள். அவர்களும் ஒரு நல்ல முடிவு எடுப்பார்கள் என்று நான் நினைக்கின்றேன்  இதனிடையே அரசியலமைப்பின  13-வது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமல்படுத்துவதற்கு எதிர்க்கட்சித்  தலைவர் சஜித் பிரேமதாச,  தயாராக இருக்கின்றார் என்றார் .அதனை மனோ கணேசன் ஊடாக சொல்லக்கூடாது. தமிழ் தேசியத்திற்கான தமிழ் மக்களது பிரதிநிதிகளாக இருப்பவர்களை அழைத்து அவர் கூற வேண்டும் எனவும் கோவிந்தன் கருணாகரம் தெரிவித்துள்ளார்.