பிக்குவின் அடாவடி-துப்பாக்கி முனையில் அச்சுறுத்தி பொது மக்களின் காணியில் புத்தர் சிலை வைக்க முயற்சி!

திருகோணமலை,குச்சவெளி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பொன்மாலைக் குடா பகுதியில் பௌத்த மதகுருக்களால் சிறுபான்மை இன மக்களின் காணிக்குள் அத்துமீறி அடாத்தாக புத்தர் சிலை வைக்க முற்பட்ட போது அமளி துமளி நிலவியுள்ளது .குறித்த சம்பவம் நேற்று (1) இடம் பெற்றுள்ளதுடன் ஒரு வாரகாலமாக இந்த நிலமை தொடர்ந்தும் இடம் பெற்று வருகிறது.

குறித்த காணிக்குள் நுழைந்த பௌத்த மதகுரு தனது மெய்ப்பாது காவலுடன் சென்றிருந்த வேலையில் பொது மக்களை மெய்பாதுகாவலன் துர்ப்பாக்கி முனையில் அச்சுறுத்தல் செய்துள்ளார். புல்மோட்டை அரிசி மலை விகாரையினை சேர்ந்த பௌத்த மதகுருவே இவ்வாறான சண்டித்தன வாய்த்தகராறில் ஈடுபடுவதாக தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பில் குச்சவெளி பிரதேச செயலகம் மற்றும் சம்மந்தப்பட்ட அரச அதிகாரிகள் இணைந்து தங்களுக்கு நீதியை பெற்றுத் தருமாறு கோரிக்கை விடுக்கின்றனர்.