தமிழகத்தில் பணிபுரிவதில் எங்களுக்கு மகிழ்ச்சி-வட மாநிலத்தவர்கள்.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவது போன்ற வீடியோக்கள் வெளியாகி வந்தது. இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கவனத்துக்கு வந்ததும் வதந்தி பரப்புபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்தார்.

இந்த நிலையில், சென்னை புழலில் பணியாற்றிவரும் வட மாநில தொழிலாளர்களுடன், காவல்துறை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில், காவல்துறை உதவி ஆணையர் ஆதிமூலம் கலந்து கொண்டு, தொழிலாளர்களுக்கு ஆலோசனைகளை வழங்கினார்.

வதந்திகளை நம்ப வேண்டாம் எனக் கூறிய அவர், பிரச்சினை ஏற்பட்டால் உடனடியாக காவல்துறையை அணுகுமாறும் அறிவுறுத்தினார். இதனைத் தொடர்ந்து, தமிழ்நாட்டில் பணிபுரிய சம்மதம் தெரிவித்து, வட மாநில தொழிலாளர்கள் செல்போன் விளக்குகளை ஒளிர விட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். மேலும் தமிழகத்தில் பணிபுரிவதில் எங்களுக்கு மகிழ்ச்சி அளிப்பதாகவும் தெரிவித்தனர்.