கனடா விபத்தில் தமிழ் இளையோர் இருவர் உயிரிழப்பு!

Kumarathasan Karthigesu

கனடா, ஒன்ராறியோ யோர்க் பிராந்தியத்தில் மார்க்ஹம்(Markham) பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் தமிழ் இளையோர் இருவர் உயிரிழந்துள்ளனர். பெண் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

மார்க்கம் வீதி மற்றும் எல்சன் வீதிப் பகுதியில் புதன் கிழமை உள்ளூர் நேரப்படி பிற்பகல் இரண்டு மணியளவில் இந்த விபத்து நேர்ந்துள்ளது. காரைச் செலுத்தி வந்த 21 வயது மதிக்கத் தக்க இளைஞனும்  காரின் பின்னால் இருந்து பயணித்த 23 வயது யுவதியுமே உயிரிழந்தனர். அதே காரில் பயணித்த 52 வயதான பெண் ஒருவர் படுகாயங்களுடன் ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டார் என்று யோர்க் பொலீஸார் (York Regional Police) தெரிவித்துள்ளனர்.

இவர்கள் பயணித்த Acura ரக காரும் கழிவு அகற்றும் வாகனம் ஒன்றுமே மோதி விபத்துக்குள்ளாகின என்று கூறப்படுகிறது. விபத்தை அடுத்து அந்த வீதி ஊடான போக்குவரத்து தடைசெய்யப்பட்டது. இளவயதினர் இருவரும் சம்ப இடத்திலேயே உயிரிழந்தனர் என்று மருத்துவ மீட்பு சேவையினர் தெரிவித்தனர்.

மார்க்ஹம் தமிழ் வட்டாரங்களில தகவலின்படி உயிரிழந்த இருவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த அக்கா மற்றும் தம்பி என்பது தெரியவந்துள்ளது. நிலா புவன் பூபாலசிங்கம், பாரி புவன் பூபாலசிங்கம் என அவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்களது பெற்றோர் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர். காயமடைந்த பெண்ணின் பெயர் விவரம் தெரியவரவில்லை.