கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழா நாளை ஆரம்பம்!

கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய பெருவிழா நாளைய தினம் (வெள்ளிக்கிழமை) ஆரம்பமாகவுள்ள நிலையில் அது தொடர்பான அனைத்து ஏற்பாடுகளும் நிறைவு பெற்றுள்ளது என யாழ்ப்பாண மாவட்ட செயலாளர் அ.சிவபாலசுந்தரன் தெரிவித்துள்ளார்.

2023ஆம் ஆண்டுக்கான கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழாவானது யாழ்ப்பாண மாவட்டச் செயலாளரது ஒருங்கிணைப்பில் யாழ்ப்பாண ஆயர் இல்லம், இலங்கை கடற்படை,நெடுந்தீவு பிரதேச செயலகம் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட சகல திணைக்களங்களின் முழுமையான ஒத்துழைப்புடன் நாளைய தினம் வெள்ளிக்கிழமை மற்றும் நாளை மறுதினம் சனிக்கிழமை ஆகிய தினங்களில் நடைபெறவுள்ளது.

மேலும், கச்சதீவு உற்சவத்தில் கலந்து கொள்ளும் பக்தர்களுக்கான நாளைய தினம் இரவு உணவு, நாளை மறுதினத்திற்கான காலை உணவு மற்றும் மீள் பயணத்திற்கான சிற்றுண்டி என்பன வழங்குவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன – என்றார்.

அதேவேளை நாளையத்தினம் யாழ்ப்பாணம் – குறிகாட்டுவான் பேருந்து சேவைகளும் , குறிகாட்டுவான் – கச்சத்தீவு படகு சேவைகளும் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன.