யாழ் கலாச்சார மண்டப திறப்பு விழாவை புறக்கணிக்கும் மாநகர முதல்வர்!

 

யாழ்ப்பாணம் கலாச்சார மண்டப கையளிப்பு நிகழ்வில் இழுபறியின் பின்பும் மாநகர சபையை புறக்கணிப்பதனால் அது தொடர்பான எந்த நிகழ்விலும் பங்குகொள்ள விரும்பவில்லை என மாநகர முதல்வர் இ.ஆனல்ட் தெரிவித்தார்.

இந்திய அரசினால் இந்திய நாணயத்தில் 100 கோடி ரூபா செலவில் அமைக்கப்பட்ட கலாச்சார மண்டபம் எதிர்வரும் 11 ஆம் திகதி இடம்பெறவுள்ள நிலையில் மண்டபம் யாருக்கு, எவ்வளவு என்பதில் மத்திய அரசிற்கும் மாநகர சபைக்கும் இடையில் பெரும் முரண்பாடு தோற்றுவிக்கப்படுகின்றது.
இந்த நிலையில் நாளைய தினம்  கையளிப்பு நிகழ்வில் இந்திய அரசிடம் இருந்து இலங்கை அரசிடம் கையளிக்கும் நிகழ்வு மட்டுமே காட்டப்படும் அதே நேரம் இலங்கை அரசு மாநகர சபையிடம்  கையளிக்கும் நிகழ்வும் காட்டப்படாது மாநகர சபையின் பங்களிப்பும் இன்றி நிகழ்வை நடாத்த ஆரம்பம் முதலே  ஏற்பாடுகள் செய்யப்பட்டதோடு அதற்கான அழைப்பிதழ்களும் இரகசியமாக அச்சிடப்பட்டும் விட்டது.
இதனையறிந்து  யாழ்ப்பாணம் மாநகர முதல்வர் என்ற வகையில்  7ஆம் திகதி மற்றும் 8ஆம் திகதிகளில்  ஆளுநர் மற்றும் புத்தசாசன அமைச்சர்களுடன் உரையாடி மாநகர சபையின் பங்களிப்பை வலியுறுத்தியபோதும்   அவை மீறுவதாகவே தற்போது  இறுதி செய்த அழைப்பிதழ் இருப்பதனால் இந்த விடயத்தில் எமது  எதிர்ப்பையும் பதிவு செய்கின்றோம்.
இந்த விடயத்தில் மாநகரத்தை திசை திருப்ப போலியான  அழைப்பிதழ் மாற்றப்பட்டு அச்சிடப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டது. இருந்தபோதும் அவ்வாறு திருத்திய அழைப்பிதழ் மற்றும் புதிய நிகழ்ச்சி நிரல் இன்றி அனைத்துமே பழைய ஏற்பாடுகளான மத்திய அரசின் ஏற்பாடுகள் மட்டுமே இடம்பெறுகின்ற சமயம் வெறும் வேடிக்கையாளர்களாக பங்குகொள்ள விரும்பாத காரணத்தினால் நிகழ்வைப் புறக்கணிக்கத் தீர்மானித்திருப்பதோடு இந்த கலாச்சார மண்டப விடயத்தில் இலங்கை அரசு புரியும் கபட நாடகத்தை இந்திய அரசும் புரிந்ருகொள்ள வேண்டும் என யாழ்ப்பாணம் மாநகர முதல்வர் இ.ஆனல்ட் தெரிவித்தார்.