13வது திருத்தத்தை ஏற்றுக்கொண்டால், ஒற்றையாட்சி முறையை ஏற்றுக்கொண்டதற்கு சமனாகும்: கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவிப்பு.

13வது அரசியலமைப்பை முழுமையாக நடைமுறைப்படுத்தப்படுவதை தமிழ்க்கட்சிகள் இடைக்கால தீர்வாக கருதவேண்டும் என்ற கருத்தை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறவில்லை என்று ஊடக சந்திப்பில் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு வந்திருந்த ஜெய்சங்கர், தமிழ்க்கட்சிகளுடன் சந்திப்பை நடத்தியபோது அவர் இடைக்கால தீர்வு என்ற அடிப்படையில்,13வது திருத்த நடைமுறையை குறிப்பிட்டார். இந்நிலையில் 13வது திருத்தத்தை ஏற்றுக்கொண்டால், அது இலங்கையின் ஒற்றையாட்சி முறையை ஏற்றுக்கொண்டதற்கு சமனாகும்.

மேலும் தமிழ் மக்கள் கூட்டாட்சிக் கட்டமைப்பின் அடிப்படையிலான தீர்வையே வலியுறுத்துகின்றது எனத் தெரிவித்தார். இதனையடுத்தே 13இன் முழுமை நடைமுறையை, தமிழ்க்கட்சிகள் இடைக்கால தீர்வாக கருதவேண்டும் என்று ஜெய்சங்கர் குறிப்பிட்டதாக செய்தி வெளியாகியிருந்தது.இதனை மறுத்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்  இந்திய அமைச்சர் ஜெய்சங்கரிடம் ஒரு அறிக்கையை வழங்கியுள்ளதாக குறிப்பிட்டார். அதில், 13வது அரசியலமைப்புக்கு ஏன் எதிர்ப்பு காட்டப்படுகிறது என்பது அடங்கியிருந்தது.

இலங்கைக்கு அனைத்து உதவிகளும் தேவைப்படும் நேரத்தில், குறிப்பாக இந்தியா, இலங்கையில் உள்ள மற்ற எந்த நாட்டையும் விட அதிக செல்வாக்கைக் கொண்டுள்ளது. இலங்கையை மீட்க இந்தியா முன்வந்ததன் மூலம் சிங்கள மக்கள் மத்தியில் பலரது நன்மதிப்பை இந்தியாவினால் பெற முடிந்துள்ளது. எனவே ஒற்றையாட்சிக் கட்டமைப்பிற்குள், இலங்கையின் எந்தவொரு முன்மொழிவையும் தமிழ் மக்கள் நிராகரிப்பதை, இந்தியா ஆதரிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.