தெற்கு சூடானில் அரசு நிகழ்ச்சியில் ஆடையிலேயே சிறுநீர் கழித்த அதிபர்.

ஆப்பிரிக்க நாடான தெற்கு சூடான், 2011-ம் ஆண்டு சூடானிடம் இருந்து விடுதலை பெற்றது முதல் அந்த நாட்டின் அதிபராக இருந்து வருபவர் சல்வா கீர். இவர் கடந்த மாதம் தலைநகர் ஜூபாவில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார். அப்போது நிகழ்ச்சியில் அந்த நாட்டின் தேசிய கீதம் பாடப்பட்டது. அதிபர் சல்வா கீர் மார்பில் கை வைத்தபடி நின்று தேசிய கீதத்துக்கு மரியாதை செலுத்திக் கொண்டிருந்தார்.

அப்போது அவருக்கு சிறுநீர் வந்த நிலையில், நின்றபடியே தனது ஆடையிலேயே சிறுநீர் கழித்தார். இது நிகழ்ச்சியை ஒளிப்பதிவு செய்து கொண்டிருந்த அரசு ஊடகத்தின் கேமராக்களில் பதிவானது. ஆனால் அரசு ஊடகம் அதனை ஒளிபரப்பவில்லை. இந்த நிலையில் சம்பவம் நடந்த பல நாட்களுக்கு பிறகு அதிபர் சல்வா கீர் தனது ஆடையிலேயே சிறுநீர் கழித்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலானது.

வீடியோவை பார்த்த பலரும் அதிபரின் உடல் நிலை குறித்து விமர்சனங்களையும் கேள்விகளையும் முன்வைத்து வருகின்றனர். இதனால் இந்த விவகாரம் அங்கு பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. இதனையடுத்து, வீடியோ வெளிட்டதாக கூறி அரசு ஊடகத்தில் பணியாற்றி வரும் பத்திரிகையாளர்கள் 6 பேரை போலீசார் கைது செய்தனர். இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள அந்த நாட்டின் பத்திரிகையாளர்கள் பாதுகாப்பு குழு கைது செய்யப்பட்டுள்ள 6 பத்திரிகையாளர்களையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.