மாகாணங்களுக்கான அதிகாரங்கள் அனைத்தும் மீளக் கையளிக்கப்பட வேண்டும் – அமைச்சர் டக்ளஸ்

ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரத்தினால் இல்லாது செய்யப்பட்ட மாகாணங்களுக்கான அதிகாரங்கள் அனைத்தும், மாகாண சபைகளிடம் மீளக் கையளிக்கப்பட வேண்டும் என்ற விடயம் வலியுறுத்தப்பட்டதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். மேலும், நடைமுறைச் சாத்தியமான வழிமுறையை ஏற்றுக்கொண்டு, வெளிப்படைத் தன்மையுடன் செயற்படக்கூடிய தமிழ்த் தரப்புகளுடன் இணைந்து, தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷை தொடர்பான விடயத்தில் செயற்படுவதற்குத் தாம் தயாராக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில், தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பது தொடர்பான முன்னெடக்கப்பட்டு வருகின்ற நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் கட்சிகளுடனான கலந்துரையாடல் தொடர்பில், யாழ்ப்பாணத்தில் நேற்று ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் தலைமையகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

நடைமுறைச் சாத்தியமான வழிமுறையை ஏற்றுகொண்டு வெளிப்படைத் தன்மையுடன் செயற்படக் கூடிய தமிழ் தரப்புக்களுடன் இணைந்து, தமிழ் மக்களின் அரசியல் அபிலாசை தொடர்பான விடயத்தில் செயற்படுவதற்கு தயாராக இருப்பதோடு, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில், அமைச்சரவை உப குழுவின் பிரதிநிதி என்ற அடிப்படையிலும், தமிழர்களின் பிரதிநிதி என்ற அடிப்படையிலும் இரட்டை வகிபாகத்துடன் கலந்து கொள்வதாகவும் அவர் தெரிவித்தார்.

13ஆம் திருத்தச் சட்டம் உருவாக்கப்பட்ட போது மாகாணங்களுக்கு வழங்கப்பட்ட அதிகாரங்கள் மீளவும் கையளிக்கப்பட வேண்டும் என ஜனாதிபதியிடம் இந்த சந்திப்பில் வலியுறுத்துவேன் என்றும் மேலும், 13ஆவது திருத்தச் சட்டத்தினை நடைமுறைப்படுத்துவதில் இருந்து தொடங்கி படிப்படியாக முன்னோக்கி நகர வேண்டும் என்று கடந்த 35 வருடங்களாக ஈழ மக்கள் ஜனநாயக கட்சி  வலியுறுத்தி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.