சூப்பர் 12 சுற்று: 56 ஓட்டங்கள் வித்தியாசத்தில் நெதர்லாந்தை வீழ்த்தி இந்தியா வெற்றி.

ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பையில் தற்போது சூப்பர் 12 சுற்று ஆட்டம் நடைபெற்று வருகிறது. இந்த சுற்றில் இந்தியா மற்றும் நெதர்லாந்து அணிகள் இன்று சிட்னி மைதானத்தில் மோதியது . இந்த போட்டியில் நாணய சுழற்சயில் வென்ற இந்திய அணி கப்டன் ரோகித் சர்மா துடுப்பெடுத்தாட தீர்மானித்தார் .

தொடக்க வீரராக கப்டன் ரோகித் சர்மாவும், கே.எல்.ராகுலும் களமிறங்கினர். ராகுல் 9 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். இதையடுத்து ரோகித்- கோலி இருவரும் இணைந்து அணியின் ஸ்கோரை சீரான வேகத்தில் உயர்த்தினர். ரோகித் சர்மா அரைசதமடித்து 53 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.

இதனை தொடர்ந்து கோலியுடன் சூரியகுமார் யாதவ் இணைந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். கோலி நடப்பு தொடரில் தனது இரண்டாவது அரைசதத்தை பூர்த்திசெய்தார். அதிரடி காட்டிய சூரியகுமார் யாதவும் 25 பந்துகளில் அரைசதத்தை கடந்தார். இறுதியில் இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகளை இழந்து 179 ஓட்டங்கள் குவித்தது.

இதையடுத்து 180 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நெதர்லாந்து அணி விளையாடியது. நெதர்லாந்து அணியில் தொடக்க வீரராக களமிறங்கிய விக்ரம்ஜித் சிங் 1 ஓட்டத்தில் ஆட்டமிழந்தார் . மற்றொரு தொடக்க வீரரான மேக்ஸ் ஓ டவுட் 16 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து களமிறங்கிய பாஸ் டி லீடே 16 ஓட்டங்களும் காலின் அக்கர்மன் 17 ஓட்டங்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

அடுத்தடுத்து களமிறங்கிய வீரர்களும் சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர் . இறுதியில் நெதர்லாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 123 ஓட்டங்கள் எடுத்தனர். இதையடுத்து இந்தியா 56 ஓட்டங்கள் வித்தியாசத்தில் நெதர்லாந்து அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. இந்திய அணி சார்பில் புவனேஸ்வர் குமார், அர்ஷ்தீப் சிங், அக்சர் படேல், அஸ்வின் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர். மேலும் முகமது ஷமி ஒரு விக்கெட் எடுத்தார்.