தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையினை நீக்குமாறு இந்தியாவிடம் கோரிக்கை

தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையினை நீக்குமாறு ஜனநாயக போராளிகள் கட்சியினர் இந்திய அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்ததாக அதன் ஊடகப் பேச்சாளர் துளசி தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் இன்ற நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். அண்மையில் ஜனநாயக போராளிகள் கட்சிக்கு இந்தியா செல்வதற்கு கிடைத்த சந்தர்ப்பத்தில் டில்லியில் பா.ஜ.க.வின் முக்கியஸ்தர் ஒருவரை சந்தித்தபோது பல்வேறுபட்ட கோரிக்கையினை முன் வைத்திருந்ததாக குறிப்பிட்டார். அந்த கோரிக்கைகள் அவரால் செவி சாய்க்கப்பட்டதோடு அதற்கு தீர்வுகள் வழங்கப்படும் என நம்புகின்றோம்’ என்று அவர் கூறினார்.

மேலும்,  மாகாண சபை தேர்தல் விரைவில் நடத்தப்படவேண்டும், தொல்லியல் திணைக்களத்தினால் வடக்கு கிழக்கு பகுதிகளில் புனித பூமி அல்லது பௌத்த சின்னங்களை உடைய பூமி பெயரால் தொடர்ச்சியாக பிரச்சனைகளை ஏற்படுத்தப்படுகின்றன என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார். மேலும் கிழக்கு மாகாண பகுதிகளில் இஸ்லாமிய மக்கள் தமிழர்களின் காணிகளை அபகரித்து திட்டமிட்ட குடியேற்ற நடவடிக்கைகளை முன்னெடுக்கின்றமை நிறுத்தப்பட வேண்டும் எனவும் அவர் கோரினார்.

தேர்தல் அரசியலுக்கு வந்திருக்கின்ற விடுதலைப் புலிகளை அவர்களது தேர்தல் ஜனநாயக வழிமுறைகளை ஏற்று தம்மீதான தடையினை இந்தியா நீக்கவேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.தெற்காசிய பிராந்தியத்தில் முக்கிய வல்லரசான இந்தியா புலிகள் மீதான தடை நீக்கப்பட வேண்டும். தமிழர்களுக்கான ஒரு சமஸ்டி அடிப்படையில் தீர்வுவழங்கப்பட வேண்டும்.

1987 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இலங்கையிலே கொண்டுவரப்பட்ட 13 வது திருத்த சட்டம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். இந்தியா 13 ஆவது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்தக் கோரி ஐ. நா சபையில் வலியுறுத்தியது போல இங்கே அது இலங்கையில் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் போன்ற கோரிக்கையினை விடுத்திருக்கின்றோம் என்று துளசி தெரிவித்தார்.