பசில் ராஜபக்சவுக்கு எதிராக எவரும் சவால் விடுக்க முடியாது: ரஞ்சித் பண்டார தெரிவிப்பு

 

கட்சியின் நடவடிக்கைகள் சம்பந்தமாக முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவுக்கு எதிராக எவரும் சவால் விடுக்க முடியாது என பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் பண்டார தெரிவித்துள்ளார்.

கண்டியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பொன்றில் கருத்துரைக்கும் போதே அவர் இந்த விடயத்தினை குறிப்பிட்டார்.மேலும், சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ச என்பதால், கட்சியின் பெரும்பாலான நடவடிக்கைகளை அவரே முன்னெடுத்து வருகிறார் என்றம், கட்சியின் ஸ்தாபகருக்கு கட்சியின் பணிகளை முன்னெடுக்கவும் கட்சியை வழி நடத்தவும் கட்சியின் நடவடிக்கைகளில் தலையிடவும் உரிமையில்லையா எனக் கேள்வி எழுப்பினார்.

பசில் ராஜபக்ச எவருக்கும் தேவையானவற்றை செய்வதில்லை. கட்சிக்கும் கட்சியினருக்கும் தேவையானவற்றையே செய்கிறார். இதனை விடுத்து எவருக்கும் தேவையான வகையில் கட்சியின் பணிகளை முன்னெடுக்க முடியாது.
பசில் ராஜபக்ச கட்சியை ஆரம்பித்து அந்த கட்சியை பலப்படுத்தினார். அரசியல் ரீதியாக பசில் ராஜபக்சவின் பாத்திரத்தை எவராலும் கொலை செய்ய முடியாது ‘ எனக் குறிப்பிட்டார்.