உள்ளூராட்சி மன்றத் தேர்தல் மார்ச் மாதம் நடத்தப்பட வேண்டும் – கொழும்பு பேராயர்.

அடுத்த ஆண்டு மார்ச் மாதம் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.

அதன்படி உள்ளூராட்சி மன்றத் தேர்தலை எதிர்வரும் மார்ச் மாதம் தாமதமின்றி நடத்துமாறு தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

அரசாங்கம் தொடர்பில் மக்கள் தமது உணர்வுகளை வெளிப்படுத்துவதற்கான சந்தர்ப்பத்தை இது வழங்கும் கொழும்பு பேராயர் குறிப்பிட்டுள்ளார்.

வானளாவிய கட்டிடங்கள், பெரும்வீதிகள் மற்றும் தொழில்நுட்பம் என்பனவற்றினால் மட்டும் ஒரு நாடு வளர்ச்சியடைந்ததாக கருதப்படாது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இவ்வாறான செயற்திட்டங்கள் அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு தரகுப்பணம் சேகரிக்க உதவுமே தவிர இலங்கையின் அபிவிருத்தியில் விளைவதில்லை என்றும் கர்தினால் கூறியுள்ளார்.

உணவு கிடைக்காமல் தற்போது அன்றாட பணிகளை மேற்கொள்ள முடியாமல் மக்கள் சிரமப்படுகின்றனர் என்றும் அதிகாரிகளின் நடவடிக்கைகளால் நடுத்தர வர்க்கத்தினர் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர் என்றும் கொழும்பு பேராயர் குறிப்பிட்டுள்ளார்.