வத்தளையில் இனந்தெரியாத சடலம் மீட்பு: புகையிரதத்திலிருந்து விழுந்து உயிரிழந்ததாக சந்தேகம்!
C.G.Prashanthan Sri Lanka - Colombo Reporter for MEIVELI

வத்தளை, ஹுனுப்பிட்டிய புகையிரத நிலையத்திற்கு அருகிலுள்ள புதர் காடொன்றிலிருந்து இன்றைய தினம் மாலை இனந்தெரியாத நபர் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக கிரிபத்கொட பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்த நபர் புகையிரதத்திலிருந்து தவறி விழுந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளதுடன், இம்முடிவு சுமார் 3 நாட்களுக்கு முன்னர் நிகழ்ந்திருக்கலாம் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
சம்பவ இடத்திற்கு வருகை தந்த தடயவியல் சோதனை அதிகாரிகள் (SOCO) முதற்கட்ட விசாரணைகளை மேற்கொண்டனர்.
அதனைத் தொடர்ந்து, நீதவான் விசாரணைகளின் பின்னர் சடலம் பிரேத பரிசோதனைக்காக ராகம வைத்தியசாலையின் சவக்கிடங்கில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பில் கிரிபத்கொட பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


