இலங்கை தேயிலை கிராமங்கள் 500ஐ மேம்படுத்த அரசாங்கம் தீர்மானம்; 2030க்குள் 2.5 பில்லியன் டொலர் இலாபத்தை இலக்கு வைப்பதாக பிரதியமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தெரிவிப்பு!

C.G.Prashanthan Sri Lanka - Colombo Reporter for MEIVELI

நாட்டின் பொருளாதாரத்தை முன்னேற்றுவதற்காக ‘சிலோன் டீ’ (Ceylon Tea) கிராமங்கள் 500ஐ உருவாக்கி, அவற்றை நுகர்வோர் மற்றும் பொருளாதார ரீதியாக மேம்படுத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதியமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தெரிவித்துள்ளார்.

கொள்ளுப்பிட்டியிலுள்ள பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சு காரியாலயத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின் போதே அவர் இவ்விடயங்களைக் குறிப்பிட்டார்.

இந்தத் திட்டத்தின் கீழ் தெரிவு செய்யப்படும் 500 தேயிலை கிராமங்களுக்கும் தேவையான அடிப்படை மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகளை அரசாங்கமே நேரடியாக வழங்கவுள்ளதுடன், முதற்கட்டமாக இவற்றில் இருந்து 50 கிராமங்கள் தெரிவு செய்யப்பட்டு, அங்குள்ள தேயிலை தொழிற்சாலைகளை நவீனமயமாக்குவதற்கும் புனரமைப்பதற்கும் எதிர்பார்ப்பதாக பிரதியமைச்சர் சுட்டிக்காட்டினார். இத்திட்டத்தின் தேசிய உத்தியோகபூர்வ விழா இம்மாதம் 15ஆம் திகதி நுவரெலியா, கொத்மலைப் பகுதியில் ஆரம்பித்து வைக்கப்படவுள்ளதுடன், அதனைத் தொடர்ந்து இரத்தினபுரி, கலவானை பகுதியிலும் இதற்கான ஆரம்பக்கட்ட பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
தேயிலை உற்பத்திக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்படாது, மேலதிக மாற்றுப் பயிர்ச்செய்கைகளையும் மேற்கொள்வதன் ஊடாக வாழ்வாதாரத்தை கட்டியெழுப்பவும், நாட்டின் பொருளாதாரத்தை பலப்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளதுடன், இதன் மூலம் எதிர்வரும் 2030ஆம் ஆண்டளவில் 2.5 பில்லியன் டாலர் இலாபத்தை ஈட்டுவதற்கு எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்த ஊடகவியலாளர் சந்திப்பின் போது, ‘சிலோன் டீ கிராமம் 500’ திட்டம் தவிர கல்வி அமைச்சின் ஊடாக மலையக பாடசாலைகளின் கல்வி தரம் மற்றும் அபிவிருத்தி தொடர்பான மூன்றாம் கட்ட கலந்துரையாடல் விபரங்கள் குறித்தும், மலையக மக்களுக்கான வீட்டுத்திட்டத்தின் தற்போதைய நிலைப்பாடு மற்றும் அதன் அடுத்தகட்ட நகர்வுகள் குறித்தும் தெளிவுபடுத்தப்பட்டது. இறுதி நிகழ்வாக, இந்த வேலைத்திட்டங்களுக்கும் அரசாங்கத்தின் பொருளாதார நகர்வுகளுக்கும் ஆதரவளித்து இணைந்து செயற்படும் தமிழ் மற்றும் முஸ்லிம் கட்சிகளுக்கு பிரதியமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தனது நன்றியினைத் தெரிவித்துக் கொண்டார்.