தவறை ஒப்புக்கொண்டார் ‘மிஸ்டர் கொத்து’ அதிபர் விராஜ் விக்ரமநாயக்க: பிணையில் விடுதலையான பின் ஊடகங்களுக்கு பரபரப்பு பேட்டி!
C.G.Prashanthan Sri Lanka - Colombo Reporter for MEIVELI

‘மிஸ்டர் கொத்து’ (Mr. Kottu) நிறுவனத்தின் அதிபரான விராஜ் விக்ரமநாயக்க, மகரகம காவல்துறையினரால் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார் என அவரது தரப்பு சட்டத்தரணி ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார்.
தமது நிறுவனத்தில் நான்கு ஆண்டுகளுக்கும் மேலாகப் பணிபுரிந்த ஊழியர் ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையிலேயே இந்த சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மகரகம காவல்துறையினர் விடுத்த அறிவித்தலுக்கு இணங்க, மிஸ்டர் கொத்து நிறுவன அதிபர் விராஜ் விக்ரமநாயக்க காவல்துறையில் நேரில் முன்னிலையானதைத் தொடர்ந்து அவர் இன்றைய தினம் (30) கௌரவ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
அவருக்கு எதிராக தண்டனைச் சட்டக் கோவையின் 314 மற்றும் 486 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த குற்றச்சாட்டுகள் பிணையில் செல்லக்கூடியவை என்பதால், நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்ட விபரங்களை ஆராய்ந்த நீதவான், சந்தேக நபரை 5 லட்சம் ரூபா சரீரப் பிணையில் விடுவிக்க உத்தரவிட்டார்.
மேலும், இந்த வழக்கின் அடுத்த கட்ட விசாரணைகளின் போது, இரு தரப்பினருக்கும் இடையிலான இணக்கப்பாட்டிற்காக இந்த விவகாரம் மத்தியஸ்த சபைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாகவும் சட்டத்தரணி விவரித்தார்.
நீதிமன்றத்தில் இருந்து பிணையில் வெளிவந்த பின்னர் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்த மிஸ்டர் கொத்து நிறுவன அதிபர் விராஜ் விக்ரமநாயக்க, செய்ய வேண்டிய கடமையைச் செய்யப் போய் அங்கே ஒரு தவறு நடந்துவிட்டதாகவும், ஒட்டுமொத்த இலங்கைக்கே அதுவொரு தவறான முன்உதாரணமாக அமைந்துவிட்டதாகவும் கூறினார்.
அது குறித்து தான் உண்மையிலேயே மன்னிப்பு கோருவதாகக் குறிப்பிட்ட அவர், எனது ஊழியருக்கு என்னால் ஏற்பட்ட விடயம் குறித்து எனக்கு வருத்தம் உள்ளது என்றும் தெரிவித்தார்.
இது வேறு யாரோ திட்டமிட்டு நடத்திய சதி அல்ல, உண்மையில் எனது பக்கமிருந்த தவறினாலேயே இது நடந்தது என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன் என்றும் அவர் கூறினார்.
எதிர்காலத்தில் இவ்வாறான தவறுகளைத் திருத்திக்கொண்டு, புதியதொரு பயணத்தைத் தொடங்க எதிர்பார்த்துள்ளதாகவும், இனிவரும் காலத்தில் புதியதொரு பாணியில் ‘புதிய கொத்து’ ஒன்றுடன் மீண்டும் வருவேன் என்றும் அவர் சிரித்தபடி ஊடகங்களிடம் தெரிவித்துச் சென்றார்.

