தேசிய மக்கள் சக்தியின் (திசைகாட்டி) தேர்தல் கால வாக்குறுதிகள் வெறும் மேடைப் பேச்சுகளா? – சஞ்சீவ எதிரிமான்ன கேள்வி

C.G.Prashanthan Sri Lanka - Colombo Reporter for MEIVELI

தேர்தல் காலத்தில் திசைகாட்டி அரசாங்கம் நாட்டு மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளின்படி, வெளிநாட்டு ஊழியர்கள் டொலர்களை நாட்டுக்கு அனுப்புவதில் ஏற்பட்டுள்ள தாமதமானது, தற்போதைய அரசாங்கத்தின் மீதான வெளிநாட்டு ஊழியர்களின் நம்பிக்கையீனத்தை வெளிப்படுத்துவதாக இருக்கலாம் என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சீவ எதிரிமான்ன தெரிவித்துள்ளார்.

இன்று (2026.06.03) பத்தரமுல்ல நெலும் மாவத்தையிலுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சீவ எதிரிமான்ன:
> “தேசிய பொருளாதாரத்தின் வெளிநாட்டுத் துறையில் விரைவான மாற்றத்தை ஏற்படுத்துவதற்காக, தேர்தல் காலத்தில் திசைகாட்டி அரசாங்கம் மிகவும் அழகான, பிரபலமான ஒரு முன்மொழிவை முன்வைத்தது. அதுதான் வெளிநாடுகளில் வாழும் இலங்கை நண்பர்களிடமிருந்து கிடைக்கப் போகும் டொலர்கள் பற்றிய கதை. இந்த முன்மொழிவு அண்மைய நாட்களாக மீண்டும் பேசும்பொருளாக மாறியுள்ளது.
>
அனுர திஸாநாயக்க தலைமையிலான திசைகாட்டி அரசாங்கம் ஆட்சிக்கு வந்து, அதன் ஒட்டுமொத்தப் பதவிக்காலத்தில் இப்போது மூன்றில் ஒரு பகுதி நிறைவடைந்துள்ளது. ஆனால், வெளிநாடுகளில் வாழும் இலங்கையைச் சேர்ந்த அந்த தாராளமனம் கொண்ட நண்பர்களை இந்த அரசாங்கம் இன்னும் சந்திக்கவில்லை. நமக்குத் தெரிந்தவரை, அந்த வழியின் ஊடாக மில்லியன் கணக்கான டொலர்கள் ஒருபுறமிருக்க, ஒரு டொலர் கூட இன்னும் நாட்டிற்குள் வரவில்லை.
இந்த பிரபலமான முன்மொழிவு, தேர்தல் மேடைகளில் பேசப்பட்ட வெறும் உணர்ச்சிப்பூர்வமான பேச்சு மட்டும்தானா? இல்லை. கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது கௌரவ அனுர திஸாநாயக்க அவர்களின் வெற்றிக்காக முன்வைக்கப்பட்ட ‘வளமான நாடு – அழகான வாழ்க்கை’ கொள்கைப் பிரகடனத்திலும் அவர்கள் இந்தக் கருத்தாக்கத்தை முன்வைத்திருந்தார்கள்.

தேர்தல் மேடைகளில் பொதுமக்கள் இது குறித்து அறிவற்றவர்கள் என்ற ரீதியில் அவர்கள் பேசினாலும், கொள்கைப் பிரகடனத்தில் முறையானதொரு கட்டமைப்பின் கீழ் இந்த விடயம் விவாதிக்கப்பட்டிருந்தது. கொள்கைப் பிரகடனத்தில், அவர்கள் வெளிநாட்டு ஊழியர்களுக்கான பிணைமுறி முன்மொழிவொன்றை முன்வைத்திருந்தார்கள். இரண்டாவதாக, பிரதேச அபிவிருத்தித் திட்டங்களுக்காக, வெளிநாட்டு இலங்கையர்களை இலக்கு வைத்து புதிய அபிவிருத்தி பிணைமுறி முன்மொழிவொன்றும் அதில் உள்ளடக்கப்படிருந்தது.

இவ்வாறானதொரு திட்டம் ஏன் இன்னும் நடைமுறைப்படுத்தப்படவில்லை? இதற்கு முக்கிய காரணம், இந்த அரசாங்கம் மக்களுக்கு முன்வைத்த தங்களுடைய சொந்தக் கொள்கைப் பிரகடனத்தைக் கைவிட்டுவிட்டே ஆட்சியை நடத்துகிறது. அதேபோன்று, வெளிநாட்டு இலங்கையர்களுக்கு டொலர்களை அனுப்பும் அளவுக்கு இந்த அரசாங்கத்தின் மீது நம்பிக்கை இல்லை என்பதும் அரசாங்கத்திற்கு நன்றாகத் தெரியும்.
இக் காரணங்களைத் தவிர வேறு ஏதேனும் காரணங்கள் இருந்தால், அதனை மக்களுக்கு தெளிவுபடுத்துவது அரசாங்கத்தின் கடமையாகும்” என அவர் மேலும் தெரிவித்தார்.