பெல்மடுல்ல, நாரங்கொட தோட்டத்தில் உடைக்கப்பட்ட வீட்டினது பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து கலந்துரையாடிய பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப்

C.G.Prashanthan Sri Lanka - Colombo Reporter for MEIVELI

பெல்மடுல்ல, நாரங்கொட தனியார் தோட்டத்தில் தோட்ட உரிமையாளரால் உடைக்கப்பட்ட வீட்டின் பாதிக்கப்பட்டவர்களை பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் அவர்கள் நேற்றைய தினம் (13/05/2026) புதன்கிழமையன்று சந்தித்து கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டிருந்தார்.

மேற்படி அவ் குடும்பத்தை நேரில் சந்தித்த பிரதி அமைச்சர், அந்நிலைமை தொடர்பில் ஆராய்ந்ததோடு சம்பவ இடத்தையும் பார்வையிட்டார்.

குறித்த தோட்டம் தனியார் உரிமையாளர் ஒருவரினால் நிருவகிக்கப்படுகின்றது என்பதை அறிந்து கொண்டதோடு, என்டனி என்ற பாதிக்கப்பட்ட நபர் தனியார் காணியில் வீட்டினை கட்டியதால் அவ்வீடு உடைக்கப்பட்டதாகவும் அறியப்பட்டது.

மலையக மக்களின் பிரச்சினை காலம் காலமாக தொடர்கிறது

அப்பிரதேச மக்களுடன் கலந்துரையாடிய பிரதி அமைச்சர், இதுபோன்ற நிலைமைகள் பெருந்தோட்ட பகுதிகளில் குறிப்பாக மலையக மக்களுக்கு தொடர்சியாக காலம் காலமாக நடந்து வருகின்றது என்பதையும், இப்போது மட்டுமே சமூக வலைத்தளங்களின் ஊடாக மக்கள் மயப்படுத்தப்படுகின்றது என்பதனையும் சுட்டிக்காட்டினார்.

காலம் காலமாக எமது மக்கள் தற்காலிக வாழ்விடங்களை அமைப்பதற்கும், மரங்களை நாட்டுவதற்கும், கழிப்பறைகளை கட்டுவதற்கும், தமக்கு தேவையான வாழ்வாதார பயிர்செய்கைகளை மேற்கொள்வதற்கு அனுமதி அற்றவர்களாகவும் தொடர்ச்சியாக அடக்குமுறைகளுக்கு உட்படுபவர்களாகவும் காணப்படுகின்றனர்

இந்நிலைமைகளிலிருந்து நீங்கி முறையான தீர்வுகள் கிடைக்காமலே பல இன்னல்களுக்கு ஆளாகுவதையும் காணக்கூடியதாக உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

“10 பேர்ச் காணி வழங்குவதே தீர்வு”

எனவே இவர்களுக்கு தற்போதைய சரியான தீர்வு 10 பேர்ச் காணியை வழங்கி அவர்களுக்கான வாழ்விடத்தை அமைப்பதே சிறப்பாகும் என தெரிவித்த பிரதி அமைச்சர், அதற்கான விரைவான நடவடிக்கைகளை தேசிய மக்கள் சக்தி அரசு முன்னெடுக்கும் என்பதனை உறுதிப்படுத்தினார்.

குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸ் முறைப்பாட்டையும், உரிய தோட்ட உரிமையாளருடனும் கலந்துரையாடிய பின்னர் பாதிக்கப்பட்ட என்டனி குடும்பத்தினருக்கு சரியான நிவாரணம் கிடைக்கப்பெறுவது உறுதி செய்யப்படும் என பொதுமக்களுக்கு அவர் தெரிவித்தார்.