ஈழத்தமிழர்களின் பிரச்சினைகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் – ஜீவன் வலியுறுத்து!
Meiveli Media Team

தமிழகத்தின் முதலமைச்சராக பொறுப்பேற்கும் விஜய்க்கு நாடாளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தின் இன்றைய அமர்வில் கருத்து வெளியிட்ட அவர் இவ்வாறு கூறியுள்ளார். இதன்போது தொடர்ந்து கருத்து வெளியிட்ட அவர், “தமிழகத்தில் ஒரு புதிய வரலாறு எழுதப்பட்டுள்ளது எனக் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் தமிழகத்தை பொறுத்தவரை தற்போது பாரிய பிரச்சினையாக இருப்பது கச்சத்தீவு அல்ல என்றும், அகதி முகாம்களில் வாழும் தமிழ் மக்களின் பிரச்சினைக்கே முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
அதுமட்டுமல்லாம் மீன்பிடி பிரச்சினைக் குறித்து பேசிய அவர், மீன்பிடிப் பிரச்சினை என்பது தமிழ் மக்களுக்கும், இராணுவத்திற்கும் இடையிலான பிரச்சினை அல்ல. இது தமிழ்நாட்டில் வாழும் தமிழ் மக்களுக்கும், இலங்கையில் வாழும் தமிழ் மீனவர்களுக்கும் இடையிலான ஒரு நெருக்கடியாகும் என்றும் இதுவரை இதற்கு எந்தத் தீர்வும் வழங்கப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளார். அதேபோல், 200 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த நாட்டில் வசித்து வரும் மலையக மக்களும் பல பிரச்சனைகளைச் சந்தித்துள்ளனர். நாங்கள் நாட்டை விட்டு வெளியே சென்றால், நாங்கள் இலங்கைத் தமிழ் மக்கள் என்று பார்க்கப்படுகிறோம். அது தவறல்ல. ஆனால் எங்களுக்கு ஒரு தனித்துவமான அடையாளம் உள்ளது. அந்த நிலையில், தமிழ்நாடு அரசாங்கத்தால் தமிழ் மக்களுக்கு உரிய அங்கீகாரம் வழங்கப்படும் என்று நான் நம்புகிறேன்,” எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

