ஐக்கிய மக்கள் சக்தியின் மே தின கூட்டத்தில் பங்கேற்குமாறு ஐக்கிய தேசியக் கட்சிக்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அழைப்பு.

C.G.Prashanthan Sri Lanka - Colombo Reporter for MEIVELI

சர்வதேச தொழிலாளர் தினமான, நாட்டில் உழைக்கும் மக்களின் தினத்தை கொண்டாடும் இந்த தருணத்தில், நாட்டின் உழைக்கும் மக்களின் உரிமைகளைப் பாதுகாத்து, நாட்டின் அனைத்து மக்களுக்கும் சௌபாக்கியத்தை ஏற்படுத்தும் திட்டமொன்றுக்கு முக்கிய அடியை எடுத்து வைப்பதற்கு ஐக்கிய மக்கள் சக்தி எதிர்பார்க்கின்றது. இப்போது நடைமுறையில் காணப்படும் காலாவதியான அரசியல் கலாச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து, தற்போது நடக்கும் அரசியல் சூதாட்டத்திலிருந்து விலகி, கொள்கை அடிப்படையில் நாட்டை கட்டியெழுப்பும் நடுத்தரப் பாதையில், சமூக ஜனநாயகம் மற்றும் சமூக சந்தைப் பொருளாதாரத்தின் வழியாக முன்னோக்கிப் பயணிக்க நாம் தயார் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

மே தினம் தொடர்பாக இன்று (27) விசேட கூற்றை முன்வைத்து கருத்துத் தெரிவிக்கும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.

எனவே, இந்தப் பயணத்தில் கைகோர்க்குமாறு ஐக்கிய தேசியக் கட்சிக்கும், ஐக்கிய தேசியக் கட்சியின் சகல ஆதரவாளர்களுக்கும், நாட்டின் முன்னேற்றத்திற்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வரும் முற்போக்கான சகல மக்களுக்கும் மிகுந்த மரியாதையுடன் அழைப்பு விடுக்கிறேன். ஐக்கிய மக்கள் சக்தியோடு கைகோர்த்துக் கொள்வதற்கு எதிர்வரும் மே 1 ஆம் திகதி கொழும்பு மாளிகாவத்தை பி.டி. சிரிசேன விளையாட்டு மைதானத்திற்கு இலட்சக்கணக்கில் வந்து ஒன்றாய் இணையுமாறு அழைப்பு விடுக்கிறேன் என்று எதிர்க்கட்சித் தலைவர் இங்கு மேலும் தெரிவித்தார்.