கந்தளாயில் பாடசாலை வாகனங்கள் அதிரடிப் பரிசோதனை: பல ஆண்டுகளுக்குப் பின் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கை
கந்தளாய் யூசுப் - Sri Lanka - Reporter for MEIVELI

புதிய பாடசாலை தவணை ஆரம்பமாகியுள்ள நிலையில், மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் கந்தளாய் பொலிஸ் பிரிவில் பாடசாலை மாணவர்களை ஏற்றிச் செல்லும் பேருந்துகள் மற்றும் வேன்கள் இன்று (20) விசேட சோதனைக்கு உட்படுத்தப்பட்டன.
கந்தளாய் போக்குவரத்து பொலிஸ் பொறுப்பதிகாரி திரு. கே.ஜி.எம்.எஃப். பண்டார விடுத்த வேண்டுகோளுக்கு இணங்க, பல ஆண்டுகளுக்குப் பிறகு இந்தப் பரிசோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. திருகோணமலை மாவட்ட மோட்டார் வாகனப் பரிசோதகர் திரு. சமந்தா கருணாதிலக்க தலைமையில் கந்தளாய் பொலிஸ் நிலையத்தில் வைத்து இச்சோதனைகள் இடம்பெற்றன.
இன்றைய சோதனையின் போது தனியார் பேருந்துகள், இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான (CTB) பேருந்துகள் மற்றும் வேன்கள் என மொத்தம் 8 வாகனங்கள் விரிவாக ஆராயப்பட்டன.
பரிசோதிக்கப்பட்ட 8 வாகனங்களில் 2 வாகனங்கள் மட்டுமே மாணவர் போக்குவரத்துக்கு ஏற்ற சிறந்த நிலையில் இருப்பது கண்டறியப்பட்டது.
ஏனைய 6 வாகனங்கள் மாணவர்களை ஏற்றிச் செல்வதற்குப் பாதுகாப்பற்றவை மற்றும் பயன்பாட்டிற்குத் தகுதியற்றவை எனப் பரிசோதகர்களால் அடையாளம் காணப்பட்டது.
தகுதியற்றவை என அடையாளம் காணப்பட்ட வாகனங்களில் உள்ள தொழில்நுட்பக் குறைபாடுகளைச் சீர்செய்து, மீண்டும் அவற்றைச் சமர்ப்பிக்க 10 நாட்கள் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
மாணவர்களின் பாதுகாப்பில் எவ்வித சமரசமும் செய்ய முடியாது எனவும், குறைபாடுகளை நிவர்த்தி செய்யாத வாகனங்கள் சேவையில் ஈடுபட அனுமதிக்கப்பட மாட்டாது எனவும் மோட்டார் வாகனப் பரிசோதகர் இதன்போது எச்சரிக்கை விடுத்தார்..

