தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி சார்பாக களமிறங்கிய பெண் இறுதி நேரத்தில் தமிழரசுக் கட்சியுடன் இணைவு!

வன்னி தேர்தல் தொகுதியில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி சார்பாக களமிறங்கிய தலைமன்னார் பகுதியை சேர்ந்த யுவதி ஒருவர் நேற்று வியாழக்கிழமை தமிழரசுக் கட்சியுடன் இணைந்து வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.

குறித்த யுவதி தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியில் இணைந்து கொண்டு வன்னி தேர்தல் தொகுதி, மன்னார் மாவட்டத்தை பிரதி நிதித்துவப்படுத்தியதோடு, பாராளுமன்ற தேர்தலுக்கான சகல விதமான நடவடிக்கைகளையும் முன்னெடுத்திருந்தார். இந்த நிலையில் குறித்த யுவதி தமிழ் தேசிய மக்கள் முன்னனியில் வன்னி தேர்தல் தொகுதியில் போட்டியிட உள்ளதாகவும், கட்சியின் சின்னம் மற்றும் கட்சியின் தலைவரின் புகைப்படங்களுடன் சுவரொட்டிகள் தயாரிக்கப்பட்டு, முகப்புத்தகங்களில் காட்சிப்படுத்தப்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில் வியாழக்கிழமை தமிழரசுக் கட்சியின் வேட்பாளராக களமிறங்கியதோடு வவுனியா சென்று வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார்.

குறித்த விடயம் தொடர்பாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் மன்னார் மாவட்டத்திற்கு பொறுப்பான  ஒருவர் தெரிவித்தபோது, குறித்த யுவதி தனது சுய விருப்பத்துடன் தமிழ் தேசிய மக்கள் முன்னணியில் இணைந்து கொண்டு வன்னி தேர்தல் தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்தார்.அதற்கு அமைவாக சகல ஆவணங்களிலும் கையொப்பமிட்டார். புதன்கிழமை குறித்த யுவதி எம்மை தொடர்பு கொண்டு தான் எக்கட்சியிலும் போட்டியிடவில்லை என தெரிவித்தார்.

தமது கிராமத்தில் மேலும் ஒருவர் போட்டியிடுகின்றமையினால் தன்னை போட்டியிட வேண்டாம் என கூறியுள்ளனர்.இதனால் தான் போட்டியிடவில்லை என தெரிவித்தார். இந்நிலையில் அவர் வியாழக்கிழமை இலங்கை தமிழரசுக் கட்சியுடன் இணைந்து வேட்பு மனு தாக்கல் செய்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.