மன்னாரில் காற்றாலை மின்சார திட்டம்: தடுக்குமாறு ஜனாதிபதி, பிரதமரிடம் கோரிக்கை


மன்னாரில் முன்னெடுக்கப்பட்டு வரும் காற்றாலை மின் உற்பத்தி நிலையத்துக்கான கோபுரம் அமைத்தல் மற்றும் கனிய மணல் அகழ்வு செயற்பாடுகளை நிறுத்தக் கோரி, ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு அழுத்தத்தை கொடுக்கும் வகையில் தபாலட்டை மூலம் கோரிக்கைகள் முன்வைக்கும் நடவடிக்கை இன்று மன்னாரில் பொதுமக்களால் முன்னெடுக்கப்பட்டது. மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தின் ஏற்பாட்டில் அதன் தலைவர் ஜாட்சன் பிகிராடோ தலைமையில் மன்னார் பேருந்து தரிப்பிடத்தில் இன்று இந்த தபாலட்டைகளை அனுப்பும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

நூற்றுக்கணக்கான மக்கள், மத தலைவர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் ஒன்றிணைந்து ஜனாதிபதி, பிரதமருக்கான தபாலட்டைகளை அனுப்பி வைத்தனர். மன்னார் மாவட்டத்தில் கடந்த பல வருடங்களாக காற்றாலை மின் உற்பத்தி நிலையத்துக்கான கோபுரம் அமைத்தல் மற்றும் கனிய மணல் அகழ்வு நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்ற நிலையில் மக்கள் தொடர்ச்சியாக எதிர்ப்பை முன்னெடுத்து வந்தனர்.அதன் பின்னர், மன்னாரில் காற்றாலை மின் கோபுரம் அமைத்தல், மணல் அகழ்வில் ஈடுபட வேண்டாம் என்ற கோரிக்கையை முன்வைத்து மக்கள் தொடர்ந்து எதிர்ப்பை வெளிப்படுத்தி வந்தனர்.

இவை தொடர்பில் கடந்த காலங்களில் ஜனாதிபதி, பிரதமர் உட்பட உரிய அதிகாரிகளிடம் கோரிக்கைகளை முன்வைத்தபோதும் எவ்வித பலனும் கிடைக்கவில்லை. இந்த நிலையில், தற்போதைய ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோருக்கு இந்த திட்டம் அப்பகுதி மக்களுக்கு ஏற்படுத்தக்கூடிய பாதகமான விளைவுகளை எடுத்துக்காட்டி கொழும்பில் உள்ள அலுவலகங்களுக்கு மக்களின் கோரிக்கைகள் அடங்கிய தபால் அட்டைகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

புதிய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, தனது தேர்தல் பிரச்சாரங்களின்போது, தான் ஜனாதிபதியாக வந்தால், மன்னார் தீவில் அமைக்கப்படும் காற்றாலை மின்சார திட்டத்துக்கான ஒப்பந்தத்தை ரத்து செய்வதாக கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.