வாக்களிப்பு நிலையங்களில் குழப்பம் ஏற்பட்டால் துப்பாக்கிச் சூடு: பாதுகாப்பு அமைச்சர் அறிவிப்பு

வாக்களிப்பு நிலையங்களில் குழப்பம் ஏற்பட்டால் துப்பாக்கிச் சூடு நடத்த பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார்.கொழும்பு சிங்கள ஊடகம் ஒன்றிடம் பேசியுள்ள அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி, இவ்வாறான செயற்பாடுகளை கட்டுப்படுத்த பொலிஸார் உள்ளிட்ட பாதுகாப்பு படையினருக்கு ஆயுதங்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். வாக்களிப்பு நாளிலும் அதன் பின்னரும் நாட்டின் பாதுகாப்பிற்காக விசேட பாதுகாப்பு வேலைத்திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

இந்நடவடிக்கைக்காக பொலிஸ் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்கு மேலதிகமாக முப்படையினரும் களமிறக்கப்படவுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார். இதேவேளை, வாக்குப்பெட்டிகளை கொண்டு செல்லும் போது விசேட பாதுகாப்பு வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. ஜனாதிபதித் தேர்தலின் பாதுகாப்பிற்காக சுமார் 54,000 பொலிஸார் ஈடுபடுத்தப்பட என்பதும் குறிப்பிடத்தக்கது.