சம்பந்தன் ஐயாவின் ஆசையை நிறைவேற்ற சஜித் பிரேமதாசவை ஆதரிக்க வேண்டும்: மட்.அமைப்பாளர் பரமசிவம் சந்திரகுமார் தெரிவிப்பு

மறைந்த சம்பந்தன் ஐயாவின் ஆசையை நிறைவேற்ற சஜித் பிரேமதாசவை ஜனாதிபதியாக்க வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் மட்டு.அமைப்பாளர் பரமசிவம் சந்திரகுமார் தெரிவித்தார்.

களுவாஞ்சிகுடியில் அண்மையில் நடைபெற்ற கூட்டத்திலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில் மறைந்த சம்பந்தன் ஐயா உயிரோடு இருக்கும்போது சஜித் பிரேமதாசவை ஜனாதிபதியாக்க வேண்டும் என பாடுபட்டவர். அது நடைபெறாமல் போய்விட்டது. மக்கள் ஒரு மாற்றத்தை எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். அந்த மாற்றம் எதிர்வரும் 21 ஆம் திகதி வெளிப்படுத்தப்படும். உண்மையான சிவில் நிர்வாகம் நடைபெறுவதற்காக மட்டக்களப்பு மக்களும் அந்த மாற்றத்திற்காக ஒன்றிணைய வேண்டும். கடந்த அரசாங்கத்தில் சரியான நிர்வாகம் நடைபெறவில்லை.

ஜனாதிபதி வேட்பாளர் இன மத வேறுபாடுகள் இன்றி சகலரையும் மதித்து நடந்து கொள்ளக்கூடிய ஒருவராக இருக்கின்றார். சஜித் பிரேமதாச தமிழ் மக்களை அதிகம் நேசிக்கின்றார். இலங்கைத் தமிழரசுக் கட்சிதான் தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகள் என ஏற்றுக்கொண்ட கட்சி. அந்த கட்சியே சஜித் பிரேமதாசவை ஆதரித்துள்ளது. தமிழ் மக்களைக் குழப்புவதற்காக பல அரசியல் கட்சிகள் பிரிக்க நினைக்கின்றார்கள். அவ்வாறான பொய்யான தேர்தல் பிரசாரங்கள் நடைபெற்று வருகின்றன. அதனை மக்கள் பொருட்படுத்தாமல் மக்களுக்கு ஏற்ற கட்சியில் போட்டியிடும் சஜித் பிரேமதாசவை ஜனாதிபதியாக தெரிவு செய்ய வேண்டும் என அவர் இதன்போது தெரிவித்தார்.