எம்.கே.சிவாஜிலிங்கத்தை கைது செய்வதற்கு யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் பொலிஸார் தயார்

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கத்தை கைது செய்வதற்கு யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் பொலிஸார் தயாராக உள்ளதாக கூறப்படுகின்றது.எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்வதற்காக இந்தியாவில் சிகிச்சை பெற்றுவரும் அவர் விரைவில் நாடு திரும்பவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அவரை கைது செய்ய பொலிஸார் தயாராகிவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காணி சுவீகரிப்பு தொடர்பாக முல்லைத்தீவில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தமை மற்றும் அரச அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்தமை ஆகிய குற்றச்சாட்டுக்கள் தொடர்பிலேயே அவரை கைது செய்ய பொலிஸார் தயாராகி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எம்.கே.சிவாஜிலிங்கம் தற்போது இந்தியாவில் சிகிச்சைப் பெற்று வருகின்றார். இந்நிலையில், அவர் விரைவில் நாடு திரும்புவார் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது. எவ்வாறாயினும், எம்.கே.சிவாஜிலிங்கம் கைது செய்யப்படுவதை தடுக்க நீதிமன்றில் மனுவொன்றை சமர்ப்பிக்க அவரது சட்டத்தரணிகள் நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்தியா செல்வதற்கு முன்னர் யாழ்ப்பாணத்தில் ஊடகவியலாளர்களிடம் பேசிய அவர், இவ்வருட ஜனாதிபதித் தேர்தலில் சுயேட்சை வேட்பாளராகப் போட்டியிடுவேன் என கூறியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.