கேரளா வயநாடு நிலச்சரிவு – 107-ஐ கடந்த பலி எண்ணிக்கை!

கேரளாவில் இதுவரை இல்லாத வகையில் பேரழிவு நிகழ்ந்துள்ளதாக, முதல்வர் பினராயி விஜயன் கூறியுள்ளார். கேரளா மாநிலம் வயநாட்டில், கனமழை காரணமாக நள்ளிரவில் மூன்று பகுதிகளில் அடுத்தடுத்த நிலச்சரிவு ஏற்பட்டது.

இந்த நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 107 ஆக உயர்ந்துள்ளது. 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். மேலும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பலரது நிலை கவலைக்கிடமாக உள்ளது. தொடர் மழை மற்றும் கடும் பனிமூட்டம் காரணாமாக மீட்பு பணியில் தொய்வு ஏற்பட்டது.

மேப்பாடி சுகாதார நிலையத்தில் 52 சடலங்கள் உள்ளன. அவர்களில் 35 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். விம்ஸ் மருத்துவமனையில் 5 உடல்களும் அடையாளம் காணப்பட்டன. வைத்திரி தாலுகா மருத்துவமனை மற்றும் பத்தேரி தாலுகா மருத்துவமனைகளில் தலா ஒருவரின் உடல் உள்ளது. நிலம்பூர் மாவட்ட மருத்துவமனையில் 30 பேர் இறந்துள்ளனர்.

இதனிடையே, செய்தியாளர்களை சந்தித்து பேசிய முதல்வர் பினராயி விஜயன், இதுவரை நம் நாடு இதுவரை சந்தித்திராத பெரும் துயரமான நிகழ்வு என வேதனை தெரிவித்த அவர், மீட்புப் பணிகள் துரிதமாக நடக்கிறது என்றார்.

இது வரை உயிரிழந்தவர்களில் 33 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர், 5,500 பேர் மீட்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மேலும், 48 மணி நேரத்தில் 57 செ.மீ., மழை பெய்ததாக குறிப்பிட்ட அவர், நிலச்சரிவில் சிக்கியுள்ளவர்களை கண்டறிய மோப்ப நாய் அழைத்து வரப்பட்டுள்ளதாக கூறினார்.